சென்னையில் 11 இடங்களில் நவீன குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தங்கள் அமைப்பதற்காக தனியார் நிறுவனங்கள் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் சமீரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக நவீன வசதிகளுடன் கூடிய 11 குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்பட உள்ளன. ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் நடந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் மற்றும் காவல் ஆணையர் அமல்ராஜ் முன்னிலையில் தனியார் நிறுவனங்களுடன் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநகராட்சி ஆணையர் சமீரன், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பேருந்து நிலையங்கள் உருவாக்கப்பட உள்ளது என்றும், இது ஒரு புதிய முயற்சி எனவும் தெரிவித்தார்.
முதற்கட்டமாக 7 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். முதற்கட்டமாக அண்ணா சாலை, மயிலாப்பூர், டி.எம்.எஸ், வடபழனி, கிண்டி, ஆலந்தூர், எழும்பூர் ஆகிய பகுதிகளில் பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்பட உள்ளதாக ஆணையர் சமீரன் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து பேசிய சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ், மக்கள் பயன்பெறும் வகையில், நவீன வசதியுடன் கூடிய பேருந்து நிறுத்தங்கள் தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் அமைக்கப்பட உள்ளதாக கூறினார்.
மேலும் அனைத்து பேருந்து நிறுத்தங்கள் ஒரே மாதிரி இருக்கும் என்றும், பேருந்து நிலைய பராமரிக்கும் பணிகளை தனியார் அமைப்புகளே பார்த்துக்கொள்ளும் எனவும் தெரிவித்தார்.
















