தமிழகத்தில் முதற்கட்டமாக 52 கோயில்களில் பக்தர்கள் செல்போன் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை இன்று முதல் அமலுக்கு வந்தது.
தமிழகத்தில் உள்ள கோயில்களின் புனிதத்தன்மை மற்றும் ஆன்மிகச் சூழலைப் பாதுகாக்கும் வகையில், கோயிலுக்குள் செல்போன் பயன்படுத்துவதற்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் பல கோயில்களில் பக்தர்கள் செல்போன்கள் மூலம் புகைப்படம், வீடியோ எடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. ரீல்ஸ் உள்ளிட்ட வீடியோக்களை எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்வதாகவும் அறநிலையத்துறைக்கு புகார்கள் வந்தன.
அதனடிப்படையில் இன்று முதல், 52 கோயில்களில் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி திருச்செந்தூர், பழனி, திருப்பரங்குன்றம், திருவண்ணாமலை, சமயபுரம், ஸ்ரீரங்கம், மதுரை அழகர் கோவில், சென்னையில் வடபழனி முருகன் கோயில், மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், திருவேற்காடு மாரியம்மன் கோயில், குன்றத்தூர் முருகன் கோயில், காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில், வரதராஜ பெருமாள் கோயில், திருத்தணி முருகன் கோயில் உள்ளிட்ட 52 கோயில்களில் இந்த நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்தது.
இதற்கிடையே பக்தர்களின் செல்போன்களைப் பாதுகாக்கும் நடவடிக்கையாக கோயில்களின் வளாகத்திலேயே பாதுகாப்பு பெட்டக வசதிகளை ஏற்படுத்தியுள்ள அறநிலையத்துறை 5 ரூபாய் கட்டணம் என நிர்ணயித்துள்ளது. அதன் படி பக்தர்கள் தங்களது கைப்பேசிகளை பாதுகாப்பு பெட்டகத்தில் ஒப்படைக்கின்றனர்.
















