தமிழ்நாட்டின் முதலீடுகளை எளிதாக்கும் வகையில் தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையத்தை அமைப்பதற்கான சட்டமுன்வடிவை தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா சட்டப்பேரவையில் அறிமுகம் செய்தார்.
அமைச்சர் கீர்த்தனா தாக்கல் செய்த சட்டமுன்வடிவில், 2036-ம் ஆண்டுக்குள் மாநிலத்தின் பொருளாதாரம் 1.5 டிரில்லியன் டாலர் அளவை எட்டுவதற்கான இலக்கை அடையவும், தமிழகத்திற்கு வரும் முதலீடுகளை எளிதாக்கி ஒருங்கிணைத்து கண்காணிக்கவும், தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையம் அமைப்பது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் தலைமைச் செயலாளரை தலைவராக கொண்ட தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையத்திற்கான அதிகாரம் மற்றும் பரிந்துரைகளும் வரையறுக்கப்பட்டுள்ளன.
அதன்படி, வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும், ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்கும் ஆலோசனை வழங்குதல், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வசதிகளை ஏற்படுத்தும் பணிகள் ஆகியவற்றை இந்த ஆணையம் கண்காணிக்கும் என கூறப்பட்டுள்ளது.
மாநிலத்தின் முதலீட்டுச் சூழலையும், தொழில் தொடங்கி நடத்துவதற்கான அனுமதியை ஒற்றைச்சாளர முறையில் வழங்குவதற்கான பரிந்துரைகளையும் இந்த ஆணையம் வழங்கும் வகையில் சட்டதிருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சட்டமுன்வடிவு சட்டமன்ற கூட்டத்தொடரின் இறுதிநாளில் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
















