முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து தேசிய அணை பாதுகாப்பு ஆணையத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவினர், 2-வது நாளாக அணைப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
அணையின் தற்போதைய நிலை, இதுவரை மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு மற்றும் பராமரிப்புப் பணிகள், இனி மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக, முன்னாள் NHPC நிர்வாக இயக்குநர் பல்ராஜ் ஜோஷி தலைமையில் நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
2 நாட்கள் நடைபெறும் ஆய்வில், மெயின் அணை, பேபி அணை, மண் அணை மற்றும் கேரள பகுதிக்கு நீர் வெளியேறும் 13 மதகுகளை குழுவினர் பார்வையிட்டனர்.
ஆய்வின் அடிப்படையில் தயாரிக்கப்படும் அறிக்கை, தேசிய அணை பாதுகாப்பு ஆணையம் மற்றும் தமிழக, கேரள அரசுகளிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது. செப்டம்பர் 3-ம் தேதி இரு மாநில அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ள நிலையில், அணையின் நீண்டகால பாதுகாப்பு குறித்த இந்த ஆய்வு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
















