விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு திட்டத்தில் தட்கல் முறையை ரத்து செய்யக்கோரிய வழக்கில், மின்சாரத்துறை மற்றும் நிதித்துறை செயலர்கள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின் இணைப்பில், தட்கல் முறையை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கு, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது.
மதுரை மனகிரியைச் சேர்ந்த தனிநபர் தாக்கல் செய்த மனுவில், தட்கல் திட்டத்தின் கீழ் 89 ஆயிரத்து 289 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, சுமார் 2 ஆயிரத்து 431 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதில், 44 ஆயிரத்து 993 பேருக்கு மின் இணைப்பு வழங்கப்பட்ட நிலையில், பணம் செலுத்திய மேலும் 44 ஆயிரத்து 296 விண்ணப்பங்கள் நிலுவையில் இருப்பதாக மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது.
இதையடுத்து, சுமார் 2 ஆயிரத்து 400 கோடி ரூபாய் வசூல் செய்து என்ன செய்தீர்கள்? இவ்வளவு பெரிய தொகை எந்த அரசாணையின் அடிப்படையில் வசூலிக்கப்பட்டது? என நீதிபதிகள் மின்வாரிய தரப்புக்கு சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
மேலும், தட்கல் முறையில் அதிக வசதி படைத்த விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கினால், ஏழை மற்றும் சிறு, குறு விவசாயிகள் பாதிக்கப்பட மாட்டார்களா? என்றும் நீதிபதிகள் வினவினர்.
தொடர்ந்து, காத்திருப்போர் பட்டியல் சீனியாரிட்டி அடிப்படையில் பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்தும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து, மின்சாரத்துறை செயலாளர், நிதித்துறை செயலாளர் மற்றும் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
















