வாக்கு எண்ணிக்கைக்கு ‘டோட்டலைசர்’ கருவிகளைப் பயன்படுத்துவது குறித்து பரிசீலிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
14 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒன்றாக இணைத்து, மொத்தமாக வாக்குகளை எண்ணும் ‘டோட்டலைசர்’ கருவிகளை அறிமுகப்படுத்தக்கோரி, வழக்கறிஞர் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மால்யா பக்ஷி, வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
வாக்காளர்களின் தனியுரிமையைப் பாதுகாக்கவும், தேர்தலுக்குப் பிந்தைய வன்முறைகளைத் தடுக்கவும் வாக்கு எண்ணிக்கைக்கு உலகளவில் டோட்டலைசர் முறை பயன்படுத்தப்படுவதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட தேர்தல் ஆணையம் தரப்பு மூத்த வழக்கறிஞர், 50 சதவீத தேசியக் கட்சிகளும், 68 சதவீத மாநிலக் கட்சிகளும் டோட்டலைசர் முறையை எதிர்த்ததாகவும், மத்திய அமைச்சர்கள் குழுவும் இத்திட்டத்தை நிராகரித்ததாகவும் சுட்டிக்காட்டினார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வாக்கு எண்ணிக்கைக்கு ‘டோட்டலைசர்’ கருவிகளைப் பயன்படுத்துவது குறித்து பரிசீலிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.
















