நேபாள வெள்ளத்தில் சிக்கி காணாமல் போன தமிழர்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, மத்திய, மாநில அரசுகள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கும்பகோணத்தைச் சேர்ந்த தனியார் பயண நிறுவனம் மூலம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 57 பேர், ஆகஸ்ட் 23-ம் தேதி நேபாளம் சென்றுள்ளனர்.
ஆகஸ்ட் 26-ம் தேதி ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் பலர் சிக்கிய நிலையில், சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சிவஞானம் உள்ளிட்டோர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போனவர்களை விரைந்து மீட்பதுடன், மீட்கப்பட்டவர்கள், சிகிச்சையில் உள்ளவர்கள் மற்றும் காணாமல் போனவர்களின் விவரங்களை குடும்பத்தினருக்கு தெரிவிக்கக் கோரி பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
தமிழகத்தில் இருந்து யாத்திரை சென்ற 305 பேரில் 220 பேர் மீட்கப்பட்டு சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 85 பேரை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, காணாமல் போனவர்களை மீட்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கையை மத்திய, மாநில அரசுகள் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.
















