4 ஆயிரத்து 800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மீஞ்சூரில் நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் முதலமைச்சர் விஜய் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
மீஞ்சூரில் 4 ஆயிரத்து 800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டமும், ஆவடி மாநகராட்சியில் அனைத்து வீடுகளுக்கும் 24 மணி நேரமும் குடிநீர் வழங்க 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய திட்டமும் செயல்படுத்தப்படும் என அறிவித்தார்.
மதுரை, கடலூர் மாநகராட்சிகள், 9 நகராட்சிகள் மற்றும் 20 பேரூராட்சிகளில் குடிநீர் வசதிகளை மேம்படுத்த ஆயிரம் கோடி ரூபாயும், பழமையான 33 கூட்டுக்குடிநீர் திட்டங்களைச் சீரமைக்க முதற்கட்டமாக 300 கோடி ரூபாயும் ஒதுக்கப்படும் என தெரிவித்தார்.
சென்னை கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் திறனை அதிகரிக்க 410 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் கூறினார்.
மதுரை மாநகராட்சியில் 40 ஆண்டுகள் பழமையான பாதாள சாக்கடை அமைப்பைச் சீரமைக்க முதற்கட்டமாக 2 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவித்தார்.
நாகர்கோவில் மாநகராட்சியில் விடுபட்ட மற்றும் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளிலும், குன்றத்தூர் மற்றும் நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சிகளிலும், 960 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பாதாள சாக்கடைத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என தெரிவித்தார்.
சென்னை பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் மற்றும் கழிவுநீர் அமைப்புகளை மேம்படுத்த 236 கோடி ரூபாய் செலவிடப்படும் எனவும், நெல்லை மற்றும் சேலம் மாநகராட்சிகளில் 547 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திடக்கழிவிலிருந்து எரிசக்தி உற்பத்தி செய்யும் திட்டங்கள் செயல்படுத்தப்படும் எனவும் கூறினார்.
சென்னை உட்பட அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் ஆயிரத்து 850 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவித்தார்.
மேலும், பள்ளிகளைச் சுற்றி குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் சாலை வசதிகள் மற்றும் சாலை சந்திப்புகளை மேம்படுத்தும் பணிகள், 275 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டமாக செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்தார்.
















