திருப்பதி ஏழுமலையான் கோயில் துணை நிர்வாக அதிகாரி வீட்டில் இருந்து 5 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க ஆபரணங்கள் மற்றும் வெள்ளிப் பொருட்களை லஞ்ச ஒழிப்புத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் துணை நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வரும் லோகநாதம் லஞ்சம் வாங்குவதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், அவரது முகாம் அலுவலகம் மற்றும் ஏற்பேடு கிராமத்தில் உள்ள பெற்றோர் வீட்டில் ஆந்திர மாநில லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
இதில், தங்க ஆபரணங்கள், வெள்ளிப் பொருட்கள் மற்றும் ஏராளமான சொத்து பத்திரங்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், திருப்பதி எஸ்.டி.வி. நகர் பகுதியில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் இருக்கும் அவரது லாக்கரை திறந்து சோதனையிடவும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் சொத்துகளுக்கான உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க லோகநாதத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
















