தொங்கும் பனிப்பாறைகள் போன்ற இயற்கை பேரழிவுகளை சமாளிக்க தீவிரக் கண்காணிப்பு நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேபாள-திபெத் எல்லையில் நடந்த கொடிய பனிப்பாறை சரிவு மற்றும் வெள்ள பாதிப்புகளைத் தொடர்ந்து இமயமலை மாநிலங்களுடன் இணைந்து தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் உரிய பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றன. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
சுமார் 2,500 கிலோமீட்டர் நீளமுள்ள இமயமலைப் பகுதியில் 858 க்கும் மேற்பட்ட தொங்கும் பனியாறுகள் உள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. குறிப்பாக, உத்தரகண்டின் அலக்நந்தா படுகையில் மட்டும் 219 தொங்கும் பனியாறுகள் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இமயமலையில் வெப்பநிலை உலகளாவிய சராசரியை விட வேகமாக அதிகரித்து வருவதால் பனிப்பாறைகளின் பிணைப்பு விரைவாக பலவீனமடைந்து வருகின்றன.
ஏற்கனவே இதன் காரணமாக 2021-ல் ஏற்பட்ட சமோலி விபத்து போன்ற திடீர் சரிவுகளும் அதன் விளைவாக இயற்கைப் பேரிடர்களும் ஏற்பட்டுள்ளன.
அதிகரித்துவரும் வெப்பநிலையும், மாறுபடும் மழைப்பொழிவுகளும் இமயமலைப் பனிப்பாறைகளின் உறுதித் தன்மையைக் குறைத்து விடுவதால் சில பனிப்பாறைகள் “தொங்கும் பனிப்பாறைகளாக” மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இவை செங்குத்தான சரிவுகளில் வீற்றிருக்கும் இந்தப் பனிப் பாறைகள் தனித் தனியாகப் பிரிந்து சென்று மிகப்பெரிய பனிச்சரிவுகளை உண்டாக்கும் என்றும் கூறப் படுகிறது.
கண்டறியப்பட்ட இந்த பனியாறு சரிவுப் பாதைகளுக்கு மிக அருகிலேயே பத்ரிநாத், மனா போன்ற முக்கிய யாத்திரை மற்றும் சுற்றுலாத் தலங்கள் இருப்பதால், பனிச் சரிவுகளால் ஏற்படும் பாதிப்பும் அதிகமாகவே இருக்கும் என்று மதிப்பிடப் பட்டுள்ளன.
குறிப்பாக பனிச்சரிவால் ஏற்படும் வெள்ளப் பெருக்கின் உயரம் உத்தரகாண்டின் பத்ரிநாத்-மனா பகுதியில் 50 மீட்டரை விட அதிகமாக இருக்கும் என்று ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன. இத்தகைய கடுமையான நிகழ்வு நடந்தால் அப்பகுதியில் உள்ள மொத்த குடியிருப்புகளையும் உள்கட்டமைப்புகளையும் முழுமையாக அழித்துவிடும் என்று கணிக்கப் பட்டுள்ளது.
இந்தப் பனிச்சரிவுகள், பனிப்பாறை ஏரி உடைப்பு, வெள்ளம் (GLOFs) போன்ற அடுத்தக் கட்ட ஆபத்துகளையும் ஏற்படுத்தும் என்று கண்டறியப் பட்டுள்ளது.
இந்த அலக்நந்தா படுகையில் பனிச்சரிவு தொடர்பான ஆபத்துகளுக்கு ஆளாகும் நிலை அடுத்த பத்தாண்டுகளில் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
2000-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2030-க்குள் 120 சதவீதம் அதிகமான கட்டிடங்களும் உள்கட்டமைப்பு நிலப்பகுதிகளும் அபாயத்திற்கு உள்ளாகும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அதே காலகட்டத்தில், இந்த அபாயகரமான பகுதிகளில் வாழும் மக்களின் எண்ணிக்கை 17% அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளம் தெளிவான எச்சரிக்கையை வழங்கியுள்ளதாக கூறியுள்ள விஞ்ஞானிகள்,நிலச்சரிவுகள், பனிச்சரிவுகள் மற்றும் வெள்ளப்பெருக்குகள் ஒன்றோடொன்று தொடர்புடைய ஆபத்தின் அடுக்குகள் என்றும் ‘தொங்கும் பனிப்பாறைகளை’ கூர்ந்து கண்காணிக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளனர்.
பேரழிவுக்கும் தப்பிப்பிழைப்பதற்கும் இடையிலான வித்தியாசம் அதிர்ஷ்டம் அல்ல, தயார்நிலை, கண்காணிப்பு மற்றும் விரைவான நடவடிக்கை என்று ஆய்வுகள் சுட்டிக் காட்டியுள்ளன.
ஆல்ப்ஸ் மலைத்தொடரைப் போல அதிநவீன நேரடி ரேடார் அமைப்புகள் மற்றும் தானியங்கி எச்சரிக்கை கருவிகள் இமயமலையின் மிக உயரமான மற்றும் கடினமான நிலப்பரப்புகளில் இன்னும் முழுமையாக நிறுவப்படவில்லை.
என்றாலும் இஸ்ரோவும் மத்திய நீர் ஆணையமும் இணைந்து அதிநவீன செயற்கைக்கோள் தொழில்நுட்பம் மூலம் இமயமலைப் பகுதியெங்கும் உள்ள பனிப்பாறைகள் மற்றும் பனியாறு ஏரிகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன.
மேலும் பேரிடர் அபாயங்களைக் குறைக்க தேசிய பனி ஆறு ஏரி உடைப்பு, வெள்ளம் போன்ற அபாய மேலாண்மை திட்டத்தை மத்திய தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் செயல்படுத்தி வருகிறது.
















