சென்னையில் உலகத்தரம் வாய்ந்த தமிழ்நாடு ஒலிம்பிக் நகரம் அமைக்கப்படும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டு பேசிய முதலமைச்சர் விஜய், தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சென்னையில் உலகத்தரம் வாய்ந்த தமிழ்நாடு ஒலிம்பிக் நகரம் அமைக்கப்படும் என தெரிவித்தார்.
உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு அரங்கங்கள், அதிநவீன விளையாட்டு உபகரணங்கள், உயர்தர செயல்திறன் பயிற்சி மையங்கள், விளையாட்டு மருத்துவ மையங்கள் மற்றும் வீரர்கள், பயிற்சியாளர்களுக்கான தங்குமிட வசதிகள் உள்ளிட்ட நவீன உள்கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும் என கூறினார்.
தமிழகத்தைச் சேர்ந்த வீரர்கள் ஒலிம்பிக் மற்றும் பிற சர்வதேச போட்டிகளில் அதிகளவில் பதக்கங்களை வெல்லவும், ஒலிம்பிக் பதக்கங்களை வெல்லக்கூடிய திறமையான வீரர்களை உருவாக்கவும் இந்த மையம் உதவும் என குறிப்பிட்டார்.
மேலும், தமிழகத்தில் புதிய மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் உருவாக்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்தார்.
அங்கு சர்வதேச தரத்திலான மோட்டார் ஸ்போர்ட்ஸ் பந்தயத் தடம், நவீன உள்கட்டமைப்பு மற்றும் பயிற்சி வசதிகள் ஏற்படுத்தப்படும் என்றும்,ஃபார்முலா 1, 2, 3, 4 உள்ளிட்ட சர்வதேச போட்டிகளை நடத்துவதற்கான கட்டமைப்புகள் உருவாக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இளைஞர்களின் மோட்டார் ஸ்போர்ட்ஸ் திறமைகளைக் கண்டறிந்து, பயிற்சி மற்றும் போட்டி வாய்ப்புகளை வழங்கி, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான வீரர்கள் உருவாக்கப்படுவார்கள் எனவும் கூறினார்.
உலகத்தரம் வாய்ந்த மோட்டார் வாகன பந்தய அரங்குகள் அமைப்பதன் மூலம் சுற்றுலா, சிறப்பு வாகன உற்பத்தித் தொழில், வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரம் மேம்பட வாய்ப்புள்ளதாக முதலமைச்சர் விஜய் தெரிவித்தார்.
















