வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த இரண்டு நிலநடுக்கங்களைத் தொடர்ந்து, இந்தியாவின் Operation Amistad என்ற மனிதாபிமானப் பேரிடர் மீட்புப் பணி மற்றும் மருத்துவ உதவிப் பணியும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
வெனிசுலாவில் வெறும் 37 வினாடிகள் இடைவெளியில் அடுத்தடுத்து இரண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டதைத் தொடர்ந்து பேரழிவு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து, இந்தியா மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண உதவிகளை போர்க்கால அடிப்படையில் உடனடியாக விரைந்து அனுப்பி வைத்தது.
கூடாரங்கள், சூரிய ஆற்றல் விளக்குகள், நீர் சுத்திகரிப்பு சாதனங்கள் உள்ளிட்ட 30 டன் அவசரக்காலப் பொருட்கள், 6 டன் மருந்துகள் மற்றும் உலகின் முதல் அதிநவீன, கையடக்க மற்றும் விரைவாகப் பயன்படுத்தக்கூடிய அவசர மருத்துவமனைகள் இரண்டு வெனிசுலாவுக்கு அனுப்பி வைக்கப் பட்டது.
கடந்த ஜூன் 26 ம் தேதி இந்திய விமானப்படையின் இரண்டு C-17 குளோப்மாஸ்டர் III விமானங்களில், இந்திய ராணுவத்தின் 60 பாரா கள மருத்துவமனையும், மீட்புக் குழுவினரும் வெனிசுலாவுக்கு விரைந்து சென்றனர்.
41 பேர் கொண்ட இந்தக் குழுவில் அறுவை சிகிச்சை நிபுணர்கள், மயக்க மருந்து நிபுணர்கள், எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள், பல் மற்றும் பிற மருத்துவர்கள், துணை மருத்துவப் பணியாளர்கள் மற்றும் ஆதரவுப் பணியாளர்கள் இருந்தனர்.
இந்திய மருத்துவக் குழுவினர் ஒரு தற்காலிக மருத்துவமனையை வெனிசுலாவில் நிறுவி, அவசர சிகிச்சைப் பிரிவுகள், வென்டிலேட்டர்கள் மற்றும் மருந்துப் பொருட்களைக் கொண்டு காயமடைந்த நூற்றுக்கணக்கான மக்களுக்குச் சிகிச்சை அளித்தனர்.
தலைநகர் கராகஸில் உள்ள சர்வதேச ‘லா ரின்கோனாடா’ பந்தய மைதானத்தில் இந்திய ராணுவத்தின் கள மருத்துவமனை அமைக்கப்பட்டு 8,000-க்கும் மேற்பட்ட மருத்துவச் சிகிச்சைகளையும், 20-க்கும் மேற்பட்ட முக்கிய அறுவை சிகிச்சைகளையும் இந்திய மருத்துவர்கள் மேற்கொண்டுள்ளனர்
இந்தியாவின் ஆபரேஷன் அமிஸ்டாட் நடவடிக்கையில் இந்திய ராணுவ கள மருத்துவமனையை விரைவாக நிலைநிறுத்துவதற்கும் திறம்பட செயல்படுவதற்கும் வெனிசுலா அரசின் ஒருங்கிணைப்பு முக்கிய பங்காற்றியுள்ளது.
இந்தியா வழங்கிய சரியான நேரத்திலான மனிதாபிமான உதவி, ஆதரவு மற்றும் ஒற்றுமைக்காக பிரதமர் மோடிக்கு வெனிசுவேலாவின் தற்காலிக அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தியக் குழுவினருக்கு வழங்கிய ஒத்துழைப்புக்காக வெனிசுலா அரசுக்கு நன்றி தெரிவித்துள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், ‘வசுதைவ குடும்பகம்’ என்ற கோட்பாட்டின் அடிப்படையில், தேவைப்படும் நேரங்களில் நட்பு நாடுகளுக்குத் துணையாக நிற்கும் இந்தியாவின் உறுதிப்பாட்டை ‘ஆபரேஷன் அமிஸ்டாட்’ (Operation Amistad) மீண்டும் உறுதிப்படுத்தியதாகவும், இது இந்தியாவுக்கும் வெனிசுலாவுக்கும் இடையிலான நீண்டகால நட்பையும் ஒற்றுமையையும் பிரதிபலிப்பதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது.
இதற்கிடையே வெனிசுலாவில் ஏற்பட்ட பேரழிவு நிலநடுக்கங்களால் 3,889 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 16,740 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறியுள்ள அந்நாட்டு அரசு இதுவரை 6,462 பேர் மீட்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.
இந்தப் பேரிடரைத் தொடர்ந்து 17,907 பேர் வீடற்ற நிலையில் உள்ளதாகவும், 89 தற்காலிக முகாம்களில் 16,891 பேர் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில் மொத்தம் 86,794 குடும்பங்கள் உதவிகளைப் பெற்றுள்ளதாக வெனிசுலா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
















