தாங்கள் பட்ட கஷ்டத்திற்கு பலன் கிடைத்துள்ளதாக காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பளு தூக்கும் வீரர் ராஜா முத்துப்பாண்டியின் பெற்றோர் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகராட்சிக்குட்பட்ட சங்கரலிங்கபுரத்தை சேர்ந்த முத்துப்பாண்டி – பேச்சியம்மாள் தம்பதியின் இளைய மகன் ராஜா, ஸ்காட்லாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் பளு தூக்கும் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
ராஜாவின் சாதனையை கேட்டு மகிழ்ச்சியடைந்த பெற்றோர், தாங்கள் பட்ட கஷ்டங்களுக்கு வெற்றி கிடைத்துள்ளதாக நெகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். 2018, 2022ல் காமன்வெல்த் போட்டியில் முயற்சி செய்து வெற்றி பெற முடியவில்லை என்றும், தற்போது வெற்றி பெற்று வெள்ளி வென்றுள்ளதாகவும் கூறியுள்ளனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ராஜாவின் சகோதரர் சுரேஷ்குமார், சிறுவயதில் இருந்து தானும் தம்பியும் கபடி விளையாடியதாகவும், பின்னர்தான் பளுதூக்குதல் பயிற்சி பெற்றோம் எனவும் கூறினார்.
தேசிய மற்றும் உலக அளவிலான போட்டிகளில் பங்கேற்று ராஜா பல்வேறு பதங்களை பெற்றதாகவும், தம்பியின் தொடர் முயற்சி காரணமாக வெள்ளி பதக்கம் கிடைத்துள்ளதாகவும் கூறினார். மேலும், ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்று இந்திய நாட்டிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்பது தம்பியின் லட்சியம் என சுரேஷ்குமார் தெரிவித்தார்.
இதனை அடுத்து பேசிய பயிற்சியாளர் சொர்ணமுத்து பாண்டியன், 1999ல் நடந்த காமன்வெல்த் போட்டியில் பங்கேற்று பதக்கம் வென்றதாக கூறினார். தனது மாணவர் ராஜா முத்துப்பாண்டி காமன்வெல்த் போட்டியில் வெள்ளி வென்று சாதனை படைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்தார்.
















