டெல்லியில் நடக்கும் 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக, ‘பறக்கும் கிரெம்ளின்’ என அழைக்கப்படும் தனது சிறப்பு தனி விமானத்தில் ரஷ்ய அதிபர் புதின் இந்தியா வந்துள்ளார். அவருக்காக அதிநவீனப் பாதுகாப்புகாரான ‘ஆரஸ் செனாட்’ லிமோசின் காரும் இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. ‘சக்கரங்கள் கொண்ட கோட்டை’ என்று அழைக்கப்படும் இந்த காரின் வியக்க வைக்கும் சிறப்பம்சங்கள் பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
ரஷ்ய அரசின் ‘கோர்டெஷ்’ திட்டத்தின் கீழ், ரஷ்யாவின் ‘ஆரஸ் மோட்டார்ஸ்’ மற்றும் என்ஏஎம்ஐ (NAMI) உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த ஸ்பெஷல் கார் சோவியத் காலத்து ‘ZIS-110’ லிமோசின் காரின் பிரம்மாண்டமான வடிவமைப்பை அடிப்படையாகக் கொண்டு 2018-ல் அறிமுகப்படுத்தப்பட்டதாகும்.
5,630 மில்லி மீட்டர் நீளமும், 2,000 மில்லிமீட்டர் அகலமும், 1,700 மில்லிமீட்டர் உயரமும் கொண்ட இந்தக் காரில் ஹைப்ரிட் தொழில் நுட்பத்துடன் கூடிய 4.4-லிட்டர் ட்வின்-டர்போசார்ஜ்டு V8 இன்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.
9 வினாடிகளில் 100 கிலோமீட்டர் வேகத்தை எட்டும் இந்தக் கார் அதிகபட்சமாக மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறனுடையதாகும்.
வெடிகுண்டு மற்றும் துப்பாக்கிச் சூடு தாக்குதல்களில் இருந்து முழுப் பாதுகாப்பு அளிக்கும் வகையில் பல அடுக்கு கண்ணாடிகள் மற்றும் காரின் அடியில் உள்ள தடிமனான ஸ்டீல் பிளேட்டிங் கட்டமைப்பில் இந்தக் கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.
விஷவாயு மற்றும் ரசாயனத் தாக்குதல்களின் போது எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் இந்த காருக்குள் தனி காற்று அமைப்பு ரசாயன பாதுகாப்பு அமைப்பாக வடிவமைக்கப் பட்டுள்ளது.
அதேபோல் பஞ்சர் ஆனாலும் தொடர்ந்து ஓடக்கூடிய சிறப்பு டயர்கள் இந்த காரில் பயன்படுத்தப் பட்டுள்ளது.
என்கிரிப்ட் செய்யப்பட்ட தொலைத்தொடர்பு அமைப்புகள் மற்றும் காலநிலைக்கேற்ப மாறும் சொகுசு இருக்கைகள் இதில் இடம்பெற்றுள்ளன.
புதினின் இந்த கார், ‘சக்கரங்கள் கொண்ட கோட்டை’ என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ரஷ்யாவில் விளாடிமிர் புதின் ஒரு இடத்துக்கு செல்லும்போது அவருடன் 24 கார்கள் செல்லும். ஆனால் வெளிநாட்டு பயணங்களின்போது புதின் இந்த ஒரு காரை மட்டுமே பயன்படுத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
இந்தக் காரின் பொதுமக்களுக்கான மாடல் சுமார் 2.50 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டாலும், அதிபர் புதின் பயன்படுத்தும் மாடலில் அதிநவீன ராணுவத் தரத்திலான பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளதால் இந்தக் காரின் மதிப்பு அதை விட பலமடங்கு அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
















