சர்வதேச புலிகள் தினமானது ஆண்டுதோறும் ஜூலை 29 அன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளின் நோக்கம் புலிகள் மற்றும் அவற்றின் வாழ்விடங்களைப் பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், புலிகள் போன்ற கம்பீரமான உயிரினங்களை அழிவின் விளிம்பில் இருந்து பாதுகாக்கும் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதாகும். வேட்டையாடுதல் போன்ற காரணங்களால் புலிகளின் எண்ணிக்கை குறைய தொடங்கியது. இதை தடுக்கும் நோக்கில் ஆண்டுதோறும் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை சென்னையில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் கலந்துக்கொண்ட பிரதமர் மோடி சர்வதேச புலிகள் தினம் குறித்து பேசினார் . அப்போது அவர், உலகின் உள்ள புலிகளின் எண்ணிக்கையில் 70 சதவீதம் இந்தியாவில் மட்டுமுள்ளதாகவும் மற்றும் இது போன்று சிங்கங்கள், டால்பின்களையும் பாதுகாக்கும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்த புலிகள் திட்டம் தொடங்கி 50 ஆண்டுகள் ஆகிறது. இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி கர்நாடகாவின் மைசூரில் 50 ஆண்டுகளைக் கொண்டாடும் நிகழ்ச்சியில், இந்தியப் புலிகள் கணக்கெடுப்பின் 5 வது புள்ளிவிவரங்களை, வெளியிட்டார். அதில் இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கையானது 2018-ஆம் ஆண்டில் 2,967 இல் இருந்து 6.74 சதவீதம் அதிகரித்து 2022-ஆம் ஆண்டு 3,167 ஆக அதிகரித்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.
அம்ருத் காலின் போது புலிகள் பாதுகாப்புக்கான அரசாங்கத்தின் தொலைநோக்கு பார்வையையும் பிரதமர் வெளியிட்டார், மேலும் சர்வதேச பெரிய பூனைகள் அமைப்பை (ஐபிசிஏ) தொடங்கினார். புலி, சிங்கம், சிறுத்தை, பனிச்சிறுத்தை, பூமா, ஜாகுவார் உள்ளிட்ட உலகின் ஏழு பெரிய பூனைகளின் பாதுகாப்பில் ஐபிசிஏ கவனம் செலுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
“புலிகள் திட்டம் தொடங்கி 50 ஆண்டுகள் ஆகிறது. இதன் வெற்றி இந்தியாவுக்கு மட்டுமின்றி உலகம் முழுவதற்கும் பெருமை சேர்த்துள்ளது. இந்தியா புலியைக் காப்பாற்றியது மட்டுமல்லாமல், அது செழிக்க ஒரு சிறந்த சுற்றுச்சூழல் அமைப்பையும் கொடுத்துள்ளது. நாம் சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், உலகப் புலிகளின் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 75 சதவிகிதம் இப்போது இந்தியாவில் இருப்பதும், நாட்டில் 75,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் புலிகள் காப்பகங்கள் இருப்பதும் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. அனைவரின் முயற்சியால் இது சாத்தியமானது” என்று பிரதமர் மோடி கூறினார்.
இன்று, இந்தியா முழுவதும் 75,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 54 புலிகள் காப்பகங்கள் உள்ளன. முன்னர் குறிப்பிட்டபடி, 2006 இல் 1,411 ஆகவும், 2010 இல் 1,706 ஆகவும், 2014 இல் 2,226 ஆகவும் இருந்த புலிகளின் எண்ணிக்கை தற்போது 3,167 ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
புலிகளின் சுற்றுச்சூழல் சமநிலையைப் பராமரிப்பதும், அவற்றின் வாழ்விடங்களின் பாதுகாப்பையும் உறுதிசெய்ய நாம் ஒன்றிணைந்து செயல்பட்டால் நம்மால் எஞ்சிருக்கும் புலிகளைப் பாதுகாக்க முடியும்.