பிரதமர் நரேந்திர மோடி இன்று (‛மன் கி பாத்’) மனதின் குரல் நிகழ்ச்சியின் மூலம் இன்று நாட்டு மக்களுடன் உரையாற்றினார்.
நாடு சுதந்திரம் பெற்று 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வேளையில், நாம் ஆகஸ்ட் 15 ம் தேதி நமது தேசியக்கொடியின் பாரம்பரியத்தைக் கடைப்பிடித்து நாம் வீடுதோறும் தேசியக் கொடியை ஏற்றுவோம், என்று நாட்டு மக்களுக்குப் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.
பல்லாயிரம் ஆண்டு பழம்பெரும் பொருட்களை அமெரிக்காவிடம் இருந்து மீட்டு நமது அருங்காட்சியகத்தில் சேர்த்துள்ளோம் என்பது பெருமைப்பட வேண்டிய விஷயம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
இந்தியாவுக்கு சொந்தமான 100 அரிய வகை மற்றும் பழங்கால பொருட்களை, அமெரிக்கா நம்மிடம் திருப்பி தந்துள்ளது. இந்த பொருட்கள் 250 முதல் 2,500 ஆண்டுகள் பழமையானவை. இவை இந்தியாவின் பல்வேறு பிராந்தியங்களை சேர்ந்தவை.
சோழர் காலத்தை சேர்ந்த பல சிலைகளும் அதில் அடங்கும். தமிழகத்தின் பாரம்பரிய கலாசாரத்துடன் தொடர்புடைய 12ம் நூற்றாண்டை சேர்ந்த தேவி சிலைகள் மற்றும் கடவுள் முருகன் சிலை திருப்பி கொண்டு வரப்பட்டன. 11ம் நூற்றாண்டை சேர்ந்த, நந்தியில் அமர்ந்தவாறு காணப்படும் உமா மகேஸ்வரி சிலையும், ஜெயின் தீர்த்தங்கராக்கள் சிலையும் இந்தியா திரும்பி உள்ளது.
இந்தியா கொண்டு வரப்பட்ட சூரிய பகவான் சிலையில் உள்ள மரச்சட்டம் 16 -17 ம் நூற்றாண்டை சேர்ந்தது. இது தென் இந்தியாவுடன் நெருங்கிய தொடர்பு கொண்டது. இந்த விலை மதிப்பு மிக்க சிலைகளை இந்தியாவிடம் திருப்பி அளித்த அமெரிக்க அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
யமுனை நதியில் ஏற்பட்ட வெள்ளம், மலைப்பகுதிகளில் நிலச்சரிவு, என கடந்த 103 நாட்கள் பிரச்சினைகள் ஏற்பட்டன.எந்த ஒரு இயற்கைச் சீற்றத்தையும் எதிர்கொள்வதில் நமது திறன்களும் ஆதாரங்களும் பெரும் பங்காற்றுகின்றன.
நாடு சுதந்திரம் பெற்று 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வேளையில் 60 ஆயிரம் நீர்நிலைகளை கட்டமைத்துள்ளோம். இன்னும் 50 ஆயிரம் நீர்நிலைகளை கட்டமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன. . நமது நாட்டு மக்கள் அனைவரும் முழுமையான விழிப்புணர்வு மற்றும் பொறுப்புணர்வோடு நீர் பாதுகாப்பபுக்காக புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். மழைக்காலங்களில் மக்கள் நீர் சேமிப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். உத்திர பிரதேசத்தில் ஒரே நாளில் 30 கோடி மரக்கன்றுகள் பூமியில் நடப்பட்டன. இப்படியும் சாதனை படைக்கப்பட்டுள்ளது.
உலகின் பல பகுதிகளில் இருந்தும் ஆன்மிக யாத்திரைக்காக இந்தியாவுக்குப் பலர் வருகின்றனர். இம்முறை அமெரிக்காவில் இருந்து இரண்டு பேர் அமர்நாத் யாத்திரையில் பங்கேற்றுள்ளனர்.
சமீபத்தில் பிரான்ஸ் சென்றிருந்த போது, யோகா கற்றுத்தரும் சார்லோட்டி சோப்பின் என்பவரை சந்தித்தேன். அவருக்கு 100 வயதுக்கு மேல் ஆகிறது. 40 ஆண்டுகளுக்கு மேலாக யோகா கற்று தருகிறார். தனது உடல்நலத்திற்கும், நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கும் யோகா தான் காரணம் என்கிறார்.
ஹஜ் கொள்கையில் சவுதி அரசு மாற்றம் செய்துள்ளது. இதுவரை 4 ஆயிரம் முஸ்லிம் பெண்கள், ஆண் துணையின்றி ஹஜ் பயணம் மேற்கொண்டுள்ளனர். இதற்காக சவுதி அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்கள் போதைப் பழக்கங்களைக் கைவிட்டு உடலைப் பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். ரூ.12 ஆயிரம் கோடி மதிப்புள்ள 10 லட்சம் கிலோ போதைப் பொருட்கள் அழிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தனது மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.