பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கை 6 மாதத்தில் முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்தாண்டு சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பொன்முடி, சைவ, வைணவ சமயங்கள் குறித்தும், பெண்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி கவுன்சிலர் உமா ஆனந்தன், ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
பதிலுக்கு, இதனை ரத்து செய்யக்கோரி பொன்முடி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், பொன்முடிக்கு எதிரான புகாரை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, அவருக்கு சம்மன் அனுப்பிய ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தின் முடிவு சரியானதுதான் என கூறினார்.
மேலும், விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் சட்டவிரோதமோ, குறைபாடோ இல்லை எனக் கூறிய அவர், பொன்முடியின் மனுவை தள்ளுபடி செய்தார்.
அத்துடன், பொன்முடிக்கு எதிரான வழக்கை 6 மாத காலத்திற்குள் விசாரித்து முடிக்க வேண்டும் எனவும் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டார்.
















