முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவு தினத்தையொட்டி, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் பல்வேறு தலைவர்கள் மலரஞ்சலி செலுத்தினர்
அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவு தினத்தை ஒட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா உள்ளிட்டோரும் வாஜ்பாயின் நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து, அவரது நாட்டுப்பணிகளையும் அரசியல் பங்களிப்புகளையும் தலைவர்கள் நினைவுகூர்ந்தனர்.
வாஜ்பாயின் நினைவு தினத்தை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி அவரை நினைவுகூர்ந்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், வாஜ்பாய் தொலைநோக்குப் பார்வை கொண்ட சிறந்த அரசியல் ஆளுமை என்றும், தனது வாழ்நாளை தேச சேவைக்காக அர்ப்பணித்தவர் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.
மேலும், அவரது முயற்சிகள் பல தலைமுறையினருக்கு ஊக்கமளித்ததாகவும், அவரது தலைமைத்துவம் நாட்டை வலுப்படுத்தியதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். அதோடு, நல்லாட்சி மற்றும் மக்கள் நலன் மீதான வாஜ்பாயின் கவனம், என்றும் நமக்கு வழிகாட்டியாகத் திகழும் என்றும் தெரிவித்துள்ளார்.
















