காஞ்சிபுரத்தில் அரவைக்கு அனுப்பப்பட்ட ஆயிரத்து 500 டன் நெல் மூட்டைகள் மாயமான விவகாரத்தில் நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் 2 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 5 தாலுகாக்களில் ஒரு லட்சத்து 20 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. சம்பா, நவரை, சொர்ணவாரி பருவங்களில் பயிரிடப்பட்ட ஒரு லட்சம் 35 ஆயிரம் டன் நெல் மூட்டைகளை நுகர்பொருள் வாணிப கழகத்தினர் கொள்முதல் செய்துள்ளனர்.
இந்த நெல் மூட்டைகளை, 12 அரவை நிலையங்களுக்கு அனுப்பி, அரிசியாக மாற்றி ரேஷன் கடைகளுக்கு சப்ளை செய்ய வேண்டும் என்ற விதி உள்ள நிலையில், கடந்த ஜூன் மாதம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயங்கும் அரிசி ஆலைகளில் ஊழல் தடுப்பு பிரிவினர் ஆய்வு செய்தனர். இதில், ஆயிரத்து 500 டன் நெல் மூட்டைகள் மாயமாகி இருப்பது தெரிய வந்தது. இதன் மூலம் அரசுக்கு சுமார் 3 கோடியே 75 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நெல் மூட்டைகளை முறையாக கண்காணிக்கத் தவறிய காஞ்சிபுரம் நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் அருள் வனிதா மற்றும் தரக்கட்டுப்பாடு உதவி மேலாளர் ஜெயவேல் ஆகியோரிடம் விளக்கம் கேட்கப்பட்டும் உரிய பதில் அளிக்காததால் இருவரையும் நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண் இயக்குனர் ஷில்பா பிரபாகர் சதீஷ் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
மேலும், முறைகேட்டில் ஈடுபட்டுள்ள 4 அரிசி ஆலை உரிமையாளர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
















