இந்தியாவின் முதல் அதிவேக புல்லட் ரயில் திட்டமான மும்பை-அகமதாபாத் வழித்தடத்தின் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
மும்பை-அகமதாபாத் இடையிலான புல்லட் ரயில் திட்டத்திற்கு 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 14-ஆம் தேதி, பிரதமர் மோடியும், ஜப்பான் நாட்டின் அப்போதைய பிரதமர் ஷின்சோ அபேவும் இணைந்து அடிக்கல் நாட்டினர்.
மகாராஷ்டிரா, குஜராத், தாத்ரா & நகர் ஹவேலி ஆகியவற்றை இணைக்கும் வகையில் மொத்தம் 508 கிலோமீட்டர் தூரத்திற்கு புல்லட் ரயில் வழித்தடம் அமைக்கப்படுகிறது. இதில் மும்பை, சூரத், சபர்மதி உள்ளிட்ட 12 நிலையங்கள் இடம்பெறுகின்றன. மணிக்கு 320 கி.மீ வேகத்தில் இயக்கப்படும் அதிவேக புல்லட் ரயில்கள் மூலம் இரண்டு மணி நேரத்தில் பயண இலக்கை அடைய முடியும்.
மும்பையின் பாந்த்ரா குர்லா வளாகத்தில் நிலத்தடியில் மிகவும் சவாலான பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், சூரத் உள்ளிட்டப் பகுதிகளில் கட்டுமானப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. இந்த நிலையில், மும்பை-அகமதாபாத் இடையிலான புல்லட் ரயில் சேவை அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
















