ஹைட்ரஜன் வாகனங்கள் தயாரிப்பிற்கு அடித்தளம் அமைக்கும் வகையில், உள்நாட்டிலேயே ஹைட்ரஜன் தயாரிக்கும் முயற்சியில் இந்தோ-ஜப்பான் நிறுவனம் களமிறங்கியுள்ளது. இது குறித்து விளக்கும் செய்தித் தொகுப்பை தற்போது காணலாம்.
தண்ணீரிலிருந்து ஹைட்ரஜனைப் பிரித்தெடுத்து, அதை எரிபொருளாக பயன்படுத்தும் தொழில்நுட்பத்தில் உலக நாடுகள் கவனம் செலுத்தி வருகின்றன. இந்தியாவில் கார்பன் உமிழ்வை குறைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி மற்றும் பயன்பாட்டை அதிகரிப்பதற்காக, தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக 19 ஆயிரத்து 744 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ள மத்திய அரசு, 2030ஆம் ஆண்டுக்குள் 50 லட்சம் டன் பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது. மேலும், ஹைட்ரஜனைத் தயாரிப்பதற்கு அவசியமான எலக்ட்ரோலைசர்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யவும் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
இந்நிலையில், இந்தோ-ஜப்பான் தொழில்முறை ஆலோசனை நிறுவனமான K-KCCS India, ஜப்பானின் H2 Innovation நிறுவனத்துடன் இணைந்து, கோவையில் ஹைட்ரஜன் தயாரிக்க முடிவு செய்துள்ளது. இதற்காக H2 Innovation நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் யோசுகே மோரி, தமிழ்நாட்டிற்கு வருகை தந்து அரசின் பிரதிநிதிகள், கல்வியாளர்கள் மற்றும் தொழில்துறையினருடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
மேலும், ஹைட்ரஜன் உற்பத்திக்காக பல்வேறு கல்வி மற்றும் தொழில் நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஹைட்ரஜன் தயாரிப்பில் ஆர்வமுள்ளவர்கள் தங்களுடன் இணையலாம் என்றும் ஜப்பான் நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.
ஜப்பானில் ஹைட்ரஜனை பயன்படுத்தி கார், பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், எதிர்காலத்தில் ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் வாகனங்களை இந்தியாவில் தயாரிப்பதற்கான ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்பட உள்ளதாக K-KCCS India நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதுப்பிக்கத்தக்க ஆற்றலை பயன்படுத்தி ஹைட்ரஜன் தயாரிப்பது, போக்குவரத்துத் துறையில் ஹைட்ரஜன் பயன்பாட்டை அதிகரிப்பது, உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி திட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில் இந்தோ-ஜப்பான் தொழில்முறை ஆலோசனை நிறுவனமும், ஜப்பான் நிறுவனமும் இணைந்து மேற்கொள்ளும் செயல்திட்டம், எதிர்காலத்தில் இந்தியாவில் ஹைட்ரஜன் வாகன பயன்பாட்டிற்கான வாய்ப்புகளை உருவாக்குமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
















