போதைப் பழக்கத்திற்கு மாணவர்கள் அடிமையாகாமல் இருக்க ஏபிவிபி சார்பில் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாக அந்த அமைப்பின் தென் மாநில செயலாளர் சூர்யா தெரிவித்துள்ளார்.
மதுரையில் நடப்பாண்டுக்கான ஏபிவிபி அமைப்பின் உறுப்பினர் சேர்க்கையை அந்த அமைப்பின் தென் மாநில செயலாளர் சூர்யா தொடங்கி வைத்தார். மேலும், புதிய உறுப்பினர்களாக இணைந்து கொண்டவர்களுக்கு அடையாள அட்டையை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சூர்யா, ஏபிவிபி அமைப்பில் நடப்பாண்டு அகில இந்திய அளவில் ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
தமிழகத்தில் மாணவர்கள் போதை பழக்கத்தால் மிகுந்த பாதிப்புகளை சந்தித்து வருவதாக கூறிய அவர், போதைப் பழக்கத்திற்கு செல்லும் மாணவர்களை தடுத்து அவர்களை நல்வழிப்படுத்தும் பணிகளை ஏபிவிபி செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், தேசிய சிந்தனையுடன், மாணவர்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகாமல் இருக்க ஏபிவிபி திறன் மேம்பாட்டு பயிற்சிகளை வழங்கி வருவதாக சூர்யா குறிப்பிட்டுள்ளார்.
















