பள்ளிகளில் விளையாட்டை அடிப்படை உரிமையாக்க வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வலியுறுத்தியுள்ளார்.
சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் ஜெயின் எஜுகேஷனல் சொசைட்டி சார்பில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தொடங்கி வைத்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், கல்வி உரிமை போல விளையாட்டையும் மாணவர்களின் அடிப்படை உரிமையாக்க வேண்டும் என வலியுறுத்தினார். போதை கலாச்சாரத்தை ஒழிக்கவும், மாணவர்களிடையே சாதி, மத, மொழி பேதங்களை கடந்து ஒற்றுமையை உருவாக்கவும் விளையாட்டு சிறந்த கருவி எனக் கூறினார்.
திருவொற்றியூரில் மாணவன் உயிரிழந்த சம்பவத்தை சுட்டிக்காட்டிய அமைச்சர், பள்ளிகளில் விளையாட்டு வசதிகள் இல்லாததும் இதுபோன்ற பிரச்னைகளுக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என குறிப்பிட்டார்.
தனது பெற்றோரை இழந்த இக்கட்டான காலத்தில் விளையாட்டை தேர்ந்தெடுக்காவிட்டால் ரவுடியாகத்தான் போயிருப்பேன் எனத் தெரிவித்தார். மேலும், அனைத்து பள்ளிகளிலும் தினமும் ஒரு மணி நேரம் விளையாட்டுக்கு ஒதுக்க வேண்டும் என்றும், மூன்று மாதத்திற்கு ஒருமுறை விளையாட்டு நாள் நடத்த வேண்டும் எனவும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா வலியுறுத்தினார்.
















