தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சீரற்ற மின் விநியோகத்தால் தொழில் நிறுவனங்களும், பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தில் கோடை காலம் முடிந்த பின்னரும் வெயிலின் தாக்கம் நீடிப்பதால், மின் தேவை தொடர்ந்து அதிகமாக உள்ளது. கடந்த ஜூலை 14-ஆம் தேதி மாநிலத்தின் மின் தேவை 21 ஆயிரத்து 724 மெகாவாட்டாக உச்சத்தை எட்டியது. தற்போது சுமார் 20 ஆயிரம் மெகாவாட் மின் தேவை உள்ளதால் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் குறைந்த மின்னழுத்தம் மற்றும் மின் ஏற்ற இறக்கம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக வீடுகளில் டிவி, ஃபிரிட்ஜ், மிக்சி, இன்வெர்ட்டர் உள்ளிட்ட மின் சாதனங்கள் பழுதடைவதுடன், மோட்டார் பம்ப் மற்றும் ஏசி போன்ற சாதனங்களையும் இயங்குவதில் சிக்கல் ஏற்படுகிறது.
மேலும், மின்னழுத்த பிரச்னையால் சிறு குறு தொழில் நிறுவனங்களில் இயந்திரங்கள் திடீரென நின்று பழுதடைவதால் உற்பத்தி பாதிக்கப்படுவதாக தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர்.
எனவே, மின் விநியோக கட்டமைப்புகளை முறையாக பராமரித்து, தேவையான இடங்களில் கூடுதல் மின்மாற்றிகள் அமைத்து, சீரான மின்சாரம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், தொழில் துறையினரும் வலியுறுத்தியுள்ளனர்.
















