த.வெ.க. எம்.எல்.ஏவிடம் 35 கோடி ரூபாய் பேரம் நடத்த சென்னையில் செயல்தீட்டம் தீட்டியது காவல்துறை விசாரணையில் அம்பலமாகி உள்ளது.
விஜய் தலைமையிலான ஆட்சியைக் கவிழ்க்க ஊத்தங்கரை த.வெ.க. எம்.எல்.ஏவிடம் 35 கோடி ரூபாய்க்கு பேரம் நடத்தியதாக எழுந்த புகாரில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் உள்ளிட்டோர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கில் இதுவரை 8 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் அறிவுறுத்தலின் பேரில், திருநாவுக்கரசு பேரம் பேசியதும், கார்த்திக், ரமேஷ், நரேஷ் உள்ளிட்டோர் சென்னையில் உள்ள நட்சத்திர விடுதிகளில் பேரம் நடத்துவதற்கான செயல்திட்டத்தை வகுத்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
த.வெ.க. எம்.எல்.ஏவுக்கு 35 கோடி ரூபாய் வழங்குவது குறித்து கார்த்திக், ரமேஷ் ஆகியோர் நரேஷை அணுகியதும் கண்டறியப்பட்டுள்ளது. கரூரைச் சேர்ந்த திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாநில துணைச் செயலாளர் கார்த்திக், நிதிநிறுவன அதிபர் ரமேஷ் ஆகியோர் குதிரைப் பேரத்தில் ஈடுபட்டதை காவல்துறையினரிடம் ஒப்புக்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, த.வெ.க. எம்.எல்.ஏ.விடம் பேரம் பேசிய வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக்குமாரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். பெங்களூரு, கரூர், திருச்சி, கோவை ஆகிய இடங்களில் தனிப்படை காவல்துறையினர் முகாமிட்டு தேடுவதாக கூறப்படுகிறது.மேலும், அசோக்குமாருக்கு நெருக்கமானவர்கள், உறவினர்கள், நண்பர்களின் பட்டியலை எடுத்து காவல்துறையினர் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
















