ஒருபுறம் சீனாவுடனான போட்டி… மறுபுறம் இந்தியாவில் அதிகரிக்கும் ஜப்பான் நிறுவனங்களின் தொழில் முதலீடு… இந்த வேளையில் இந்தியாவுக்கு 3 நாள் பயணமாக வந்துள்ள ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சி, பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளார். அதன் பின்னணியில் இருக்கும் மெகா பொருளாதார நகர்வு குறித்து விரிவாக பார்க்கலாம்…
ஜப்பானின் முதல் பெண் பிரதமராக சில மாதங்களுக்கு முன் பதவியேற்ற சனே தகாய்ச்சி, முதல்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ளார். ஜப்பானுக்கும் சீனாவுக்கும் இடையே பனிப்போர் நிலவும் இந்த வேளையில், அவரது இந்திய பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
ஆசியாவில் மிகப்பெரிய பொருளாதார நாடாக உள்ள இந்தியா, அந்த பட்டியலில் முதலிடத்தை நோக்கி முன்னேறி வருகிறது . ஏற்கெனவே உலகின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதாரமாக உருவெடுக்கும் இலக்குடன் இந்தியா முன்னேறி வரும் இந்த வேளையில், அந்த வளர்ச்சிப் பயணத்தில் தங்களையும் இணைத்துக்கொள்ள ஜப்பான் தீவிர ஆர்வம் காட்டி வருகிறது.
இதற்கான மிக முக்கியமான அடையாளமாகவே பிரதமர் மோடியை ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சி சந்தித்து பேசியுள்ளார்.
((பிரீத்))
இந்த சந்திப்பு வெறும் மரியாதை நிமித்தமான அரசியல் நிகழ்வு மட்டுமல்ல. அடுத்த பல ஆண்டுகளுக்கான பொருளாதார கூட்டமைப்புக்கான அடித்தளமாகவே கருதப்படுகிறது.
இதுவரை இந்தியாவில் மெட்ரோ ரயில், அதிவேக புல்லட் ரயில், சாலைகள், தொழிற்பேட்டைகள் போன்ற உள்கட்டமைப்பு திட்டங்களில் அதிக கவனம் செலுத்திய ஜப்பான், தற்போது தனது முதலீட்டை விரிவுபடுத்தியுள்ளது.
செயற்கை நுண்ணறிவு, செமிகண்டக்டர் உற்பத்தி, மின்சார வாகனங்கள், பேட்டரி தொழில்நுட்பம், பசுமை ஹைட்ரஜன், தூய்மையான எரிசக்தி, முக்கிய கனிம வளங்கள், டிஜிட்டல் தொழில்நுட்பம் என எதிர்கால உலகை தீர்மானிக்கப் போகும் துறைகளில் இந்தியாவுடன் இணைந்து செயல்பட ஜப்பான் திட்டமிட்டுள்ளது.
இதற்குக் காரணம் ஒன்றுதான், சீனாவை மட்டுமே நம்பியிருந்த உலக உற்பத்தி அமைப்பு தற்போது மாறிக்கொண்டிருக்கிறது. ஒரு நாட்டை மட்டும் சார்ந்திருப்பது ஆபத்தானது என்பதை உலக நிறுவனங்கள் உணர்ந்துள்ளன. அதில் ஜப்பானும் விதிவிலக்கல்ல.
அதனால், “China Plus One” என்ற புதிய கொள்கையின் அடிப்படையில், சீனாவுக்கு மாற்றாக இந்தியா மிகப்பெரிய உற்பத்தி மையமாக உருவாகி வருகிறது.
இதனை மிகத் துல்லியமாக புரிந்துகொண்ட நாடுகளில் ஜப்பானும் ஒன்று. தொழிலாளர் திறன், மிகப்பெரிய உள்நாட்டு சந்தை, இளைஞர்கள் அதிகம் கொண்ட மக்கள் தொகை, வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் பொருளாதாரம், அரசின் உற்பத்தி ஊக்கத் திட்டங்கள் ஆகியவை இந்தியாவை ஜப்பானின் பார்வையில் மிக முக்கிய முதலீட்டு மையமாக மாற்றியுள்ளன.
இந்நிலையில்தான் ஜப்பான் பிரதமரின் இந்திய பயணத்தின்போது, பிரதமர் மோடி முன்னிலையில் எரிசக்தி பாதுகாப்பு, எல்என்ஜி விநியோகம், முக்கிய கனிம வளங்கள், உயர்தர தொழில்நுட்ப ஆராய்ச்சி, செயற்கை நுண்ணறிவு, திறன் மேம்பாடு உள்ளிட்ட பல முக்கிய துறைகளில் புதிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகியுள்ளன.
((பிரீத்– https://www.youtube.com/watch?v=stTF0vX-FlQ))
இதுமட்டுமன்றி, இரு நாடுகளின் தனியார் நிறுவனங்களுக்கு இடையே சுமார் 120 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையொப்பமாகியிருக்கின்றன. சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், ஜனநாயக நாடுகளின் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் என்பதில் இந்தியாவும் ஜப்பானும் ஒரே நிலைப்பாட்டைக் கொண்டுள்ளன.
அதனால்தான், இந்த சந்திப்பில் வர்த்தகம், முதலீடு மட்டுமல்லாமல், பாதுகாப்பு, தொழில்நுட்பம், கடல்சார் ஒத்துழைப்பு உள்ளிட்ட பல முக்கிய அம்சங்களும் விவாதிக்கப்பட்டன.
ஏற்கெனவே மும்பை – அகமதாபாத் அதிவேக ரயில் திட்டம், இந்தியா – ஜப்பான் உறவின் மிகப்பெரிய அடையாளமாக மாறியுள்ளது. அடுத்த கட்டமாக, எதிர்கால தொழில்நுட்பங்கள் மற்றும் உலக உற்பத்தி சங்கிலியில் இந்தியாவை முக்கிய மையமாக மாற்றும் முயற்சியிலும் ஜப்பான் தீவிரமாக களமிறங்கியுள்ளது.
உலக பொருளாதாரத்தின் மையம் மெல்ல மெல்ல ஆசியாவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் இந்த காலக்கட்டத்தில், இந்தியா – ஜப்பான் இடையேயான நெருக்கம் இரு நாடுகளின் நட்பைத் தாண்டி, எதிர்கால உலக பொருளாதாரத்தின் திசையை நிர்ணயிக்கும் முக்கிய கூட்டமைப்பாக உருவெடுத்து வருகிறது. மோடி – தகாய்ச்சி சந்திப்பு, அந்த புதிய அத்தியாயத்தின் தொடக்கப் புள்ளியாக அமைந்துள்ளது.
















