பாகிஸ்தானில் 125 ஆண்டுகள் பழமையான வரலாற்றுச் சிறப்புமிக்க குருத்வாரா இடிக்கப்பட்ட சம்பவம் சீக்கியர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அது பற்றிய ஒரு செய்தித் தொகுப்பு.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் லாகூரிலிருந்து சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள 125 ஆண்டுகள் பழமையான புனிதமான சீக்கிய வழிபாட்டுத் தலமான ‘குருத்வாரா ஸ்ரீ குரு சிங் சபா சாஹிப்’ இடிக்கப்பட்டுள்ளது.
19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சீக்கிய சீர்திருத்த இயக்கமான ‘சிங் சபா இயக்கத்துடன்’ தொடர்புடைய மிக முக்கியமான வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயம் இதுவாகும்
குருத்வாரா இருந்த நிலம் தனக்கு சொந்தமானது என்ற உரிமையில் சம்பந்தப்பட்ட துறையிடமிருந்து தேவையான தடையில்லாச் சான்றிதழைப் பெறாமலேயே உள்ளூர் தொழிலதிபர் அந்த குருத்வாராவை இடித்துள்ளார்.
அப்பகுதி சீக்கியர்கள் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து பஞ்சாப் சிறுபான்மையினர் துறை அமைச்சர் ரமேஷ் சிங் அரோரா ஃபாரூகாபாத்தில் உள்ள குருத்வாரா சிங் சபாவைப் பார்வையிட்டு, அதனை உடனடியாக மீண்டும் சீரமைப்பதாக உறுதியளித்துள்ளார்.
மேலும் குருத்வாரா சிங் சபா அமைந்துள்ள நிலத்தின் உரிமை மற்றும் நிலை குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு வக்ஃப் துறைக்கு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சீக்கிய சீர்திருத்த இயக்கமான ‘சிங் சபா இயக்கத்துடன்’ தொடர்புடைய மிக முக்கியமான வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயம் இதுவாகும்.
இதற்கிடையே புனிதமான சீக்கிய வழிபாட்டுத் தலத்துக்கு எதிராக பாகிஸ்தானில் நடந்த இந்த சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்க ஒரு திட்டமிட்ட வன்முறைச் செயல் என்று இந்தியா கண்டித்துள்ளது.
இது குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரப் பூர்வ அறிக்கையில் பாகிஸ்தானில் சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தலங்கள் தொடர்ச்சியாகக் குறிவைத்துத் தாக்கப்படுவது ஆழ்ந்த கவலை அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து விரைவாக விசாரணை நடத்தி, இழிவான செயலைச் செய்த குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று இந்தியா கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும் சேதமடைந்த குருத்வாராவை விரைவில் சீரமைக்குமாறும், சிறுபான்மை மக்களின் வழிபாட்டுத் தலங்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்யுமாறும் பாகிஸ்தானை இந்தியா வலியுறுத்தியுள்ளது.
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் வெளிப்படையான கண்டன அறிக்கையை வரவேற்றுள்ள பல சீக்கிய அமைப்புகள், ராஜதந்திர வழிகள் மூலம் பாகிஸ்தானில் சிறுபான்மையினர் பாதுகாப்புப் பிரச்சினையை வலுவாக எழுப்பிய மத்திய அரசைப் பாராட்டியுள்ளன.
நீண்ட காலமாகவே பாகிஸ்தானில் உள்ள இந்து வழிபாட்டுத் தலங்கள் அழிக்கப்படுவதும் சேதப்படுத்தப்படுவதும் தொடர்கதையாக உள்ளன.
க்ஷகும்பல் வன்முறை, மதக் கலவரம், சட்டவிரோத சொத்து தகராறுகள், இறைநிந்தனைக் குற்றச்சாட்டுகளால் சிறுபான்மையினர் வழிபாட்டுத் தலங்கள் மீது தாக்குதல் நடத்தப் படுகின்றன.
குறிப்பாக சிந்து, பஞ்சாப் மற்றும் கைபர் பக்துன்க்வா மாகாணங்களில் இத்தகைய வன்முறை சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருகின்றன.
2023 முதல் 2025 ம் ஆண்டு வரை பாகிஸ்தானின் பெரும்பான்மையான இந்து மக்கள் வசிக்கும் சிந்துப் மாகாணத்தில் இந்து வழிபாட்டுத் தலங்கள் மீது தொடர்ச்சியான தாக்குதல்கள் நடந்துள்ளன.
குருநானக்கின் பிறந்த இடமான நான்கானா சாஹிப்பில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஜனம் அஸ்தான் குருத்வாராவும் பலமுறை தாக்குதல்களுக்கு குறிவைக்கப்பட்டுள்ளதாக கூறப் படுகிறது.
வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல்கள் மட்டுமில்லாமல் பெஷாவர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், பல சீக்கிய வணிகர்களும் கடைக்காரர்களும் மத வன்முறையால் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் பிரிவினைவாதக் கருத்துக்களைத் தூண்டுவதற்காக காலிஸ்தான் பயங்கரவாத சக்திகளுக்கு பாகிஸ்தானின் ISI தொடர்ந்து நிதி, பயிற்சி மற்றும் ஆயுத உதவிகளை வழங்கி வருகிறது. அதே நேரம் பாகிஸ்தானில் சீக்கிய குருத்வாராக்களை எல்லாம் அழித்து வருகிறது.
















