தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவு பெய்யாததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மிகவும் குறைந்த அளவில் வருகிறது. ஆண்டுதோறும் பாசன தேவைக்காக ஜூன் மாதம் -12-ஆம் தேதி மேட்டூர் அணை நீர் திறக்கப்படும். அதேபோல் இந்த ஆண்டும் மேட்டூர் அணையில் இருந்து பாசன தேவைக்காக கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இந்நிலையில் மழை அளவு குறைந்ததால், அணையின் நீர் இருப்பை கருத்தில் கொண்டு, டெல்டா பாசன விவசாயத்துக்கு தண்ணீர் திறக்கும் அளவு தொடர்ந்து குறைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து, 552 கன அடியிலிருந்து 3,260 கன அடியாக அதிகரித்து உள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் – 53.38 அடியாகவும், நீர் இருப்பு – 19.76 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு 3,260 கன அடி நீர் வந்துகொண்டிருக்கும் நிலையில், பாசனத்திற்காக 6000 கன அடி நீர் திறந்துவிடப்படுகிறது.