சென்னை எழும்பூர் – திருச்சி வழித்தடத்தில் இரயில்களின் வேகத்தை 2025-26-ஆம் நிதியாண்டுக்குள் 130 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்க தெற்கு இரயில்வே முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, தெற்கு இரயில்வே வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தெற்கு இரயில்வேயின் கீழ் உள்ள ஜோலார்பேட்டை – சேலம் – கோவை வழித்தடத்தில் இயக்கப்படும் இரயில்களின் வேகம் 2023-24-ஆம் நிதியாண்டுக்குள் மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூர் – விழுப்புரம் – திருச்சி வழித்தடத்தில் இயக்கப்படும் இரயில்கள் 2025-2026-ஆம் நிதியாண்டுக்குள் 130 கிலோ மீட்டர் வேகத்திலும், திருச்சி – திண்டுக்கல் – மதுரை – திருநெல்வேலி – நாகர்கோவில் வழித்தடத்தில் இயக்கப்படும் இரயில்களின் வேகம் 2026-2027-ஆம் நிதியாண்டுக்குள்ளும் மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்துக்கு உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதேபோல, கரூர் – திண்டுக்கல், மயிலாடுதுறை – திருவாரூர், ஆரல்வாய்மொழி – நாங்குநேரி – மேலப்பாளையம், மதுரை – திருமங்கலம் இடையிலான வழித்தடத்தில் இயக்கப்படும் இரயில்கள் வேகம் 2024-ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படும். அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் ஆயிரத்து 225 கிலோ மீட்டர் இரயில் தண்டவாளம் மறுசீரமைப்பு பணி முடிக்க இலக்க நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இரயிலின் வேகத்தை அதிகரிப்பது போல பாலங்களை வலுப்படுத்தல், தடுப்புச்சுவர்கள் அமைப்பது, தானியங்கி சிக்னல் அமைப்பை மேம்படுத்துவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.