ஜி20 நாடுகளின் அமைப்பில் இருந்து இந்தியா வெளியேறும் என்று பிரதமர் மோடி எச்சரித்ததாக அதிர்ச்சி தகவலை நிதி ஆயோக்கின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியும், இந்தியாவின் ஜி20 மாநாட்டு தலைமை பிரதிநிதியாகவும் இருந்த அமிதாப் காந்த் தெரிவித்திருக்கிறார். இது குறித்த ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
கடந்த வெள்ளிக்கிழமை, புது டெல்லியில் தீன் மூர்த்தி மார்க், பிரதம மந்திரி சங்க்ரலயா கலையரங்கத்தில், டாக்டர் பாலசுப்ரமணியம் எழுதிய, ‘Power Within: The Leadership Legacy of Narendra Modi’ என்ற நூலின் பிரமாண்ட வெளியீட்டு விழா நடைபெற்றது.
பிரதமர் மோடியின் தலைமைப் பண்புகளை விளக்கும் இந்த நூல், பிரமல் குழுமத்தின் தலைவரான அஜய் பிரமல், இந்தியாவின் ஜி20 தலைமை பிரதிநிதியும், நிதி ஆயோக்கின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியுமான அமிதாப் காந்த், NASSCOM நாஸ்காம் தலைவரான தேப்ஜானி கோஷ் மற்றும் பெங்களூர் இந்திய தொழில்நுட்ப கழகத்தின் பேராசிரியர் பி.மகாதேவன் ஆகியோர் முன்னிலையில் வெளியிடப்பட்டது.
இவ்விழாவில் உரையாற்றிய அமிதாப் காந்த், ஜி20 மாநாட்டில் இந்தியாவின் தலைமை பிரதிநிதியாக பணியாற்றிய போது , மோடியின் தலைமைப் பண்புகளைப் பட்டியலிட்டு பாராட்டினார்.
இந்தியாவின் தலைமைப் பண்பை வெளிப்படுத்த கிடைத்த ஒரு அரிய வாய்ப்பாக ஜி 20 உச்சி மாநாடு அமைந்திருந்தது என்றும், பல்வேறு சர்வதேச அமைப்புக்களில் இந்தியா அங்கம் வகித்தாலும்,ஜி 20 அமைப்புக்குத் தனி சிறப்பு உண்டு என்றும் அவர் கூறினார்.
உலகின் சுமார் 85 சதவீத பொருளாதார மதிப்பையும், 57 சதவீத வர்த்தகத்தையும், சுமார் 65 சதவீத மக்கள்தொகையை ஜி20 கூட்டமைப்பு நாடுகளே கொண்டுள்ளன. எனவே இந்த ஜி20 மாநாட்டில் எடுக்கும் முடிவுகள்,சர்வதேச அளவில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தும்.
ஒரே பூமி ஒரே குடும்பம் ஒரே எதிர்காலம் ‘ என்பதை இந்தியாவின் ஜி 20 தலைமையின் கருப்பொருள் என்று அறிவித்த பிரதமர் மோடி தலைமையில், கடந்த செப்டம்பர் 9 மற்றும் 10 தேதிகளில், இந்தியாவில் நடந்த ஜி 20 உச்சி மாநாட்டில், ‘டெல்லி பிரகடனம் ‘ வெளியிடப்பட்டது.
ஜி 20 அமைப்பின் உறுப்பு நாடுகளுக்கிடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்தி, அனைத்து நாட்டுத் தலைவர்களும் கையெழுத்திட்டு டெல்லி பிரகடனம் அறிவிக்கப்பட்டது பிரதமர் மோடியின் தலைமைப் பண்புக்கு ஒரு சிறந்த உதாரணம்.
இந்த டெல்லி பிரகடனத்தை உருவாக்குவதற்கு, கிட்டத்தட்ட 300 மணிநேர பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு, மொத்தம் 16 வரைவுகள் உருவாக்கப்பட்டன என்றும், ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒருமுறை பிரதமர் மோடி பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றத்தை நேரடியாக கண்காணித்துக் கொண்டிருந்தார் என்றும் அமிதாப் காந்த் தெரிவித்தார்.
பல்வேறு நாட்டுத் தலைவர்களின் கோரிக்கைகளை கவனத்தில் கொண்டு, யாருடைய கோரிக்கைகளையும் விட்டுக் கொடுக்காமல், பிரதமர் மோடி செயல்பட்டதால், எல்லோரும் முழுமனதுடன், டெல்லி பிரகடனத்தை ஏற்றுக் கொண்டனர் என்றும் அமிதாப் காந்த் கூறினார்.
இவ்வாறு, பிரதமர் மோடியின் தலைமைப் பண்பை விவரித்த அமிதாப் காந்த், ஒரு கட்டத்தில், கூட்டு பிரகடனம் ஏற்படவில்லையெனில், ஜி 20 அமைப்பிலிருந்து இந்தியா வெளியேறும் என்று பிரதமர் மோடி கடுமையாக மிரட்டும் தொனியில் எச்சரித்தார் என்றும் அமிதாப் காந்த் தனது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.
இன்று டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளில் இந்தியா சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது என்றால் , அதற்கு 100 நகரங்களில் 100 நாட்களில் 100 டிஜிட்டல் மேளாக்களை நடத்த வேண்டும் என்று திட்டமிட்டு பிரதமர் மோடி செயல்படுத்தியதே காரணம் என்று நாஸ்காம் தலைவரான தேப்ஜானி கோஷ் ,பிரதமர் மோடியின் தலைமைப் பண்பை பாராட்டி இருக்கிறார்.
மேலும், இந்தியாவின் மிகவும் பின்தங்கிய 112 மாவட்டங்களைப் பற்றி யோசித்து அவற்றை முன்னேற்றுவதற்கு திட்டம் வகுத்த பிரதமர் மோடியின் தலைமைப் பண்பு உலகத் தலைவர்களுக்கு வழி காட்டக் கூடியது என்றும் தெரிவித்தார்.
பல்வேறு நிலைகளில் பல்வேறு இடங்களில் பல்வேறு சிந்தனைகளுடன் வாழும் பல்வேறு தரப்பட்ட மக்களை முன்னேற்றப் பாதையில் அழைத்து செல்லும் ஆளுமை கொண்ட ஒரு அசாதாரண தலைவர் பிரதமர் மோடி என்பதை பாலசுப்பிரமணியன் எழுதியுள்ள இந்நூல் விவரிக்கிறது