நம்மை பிடிக்காதவர்களுக்கு நாம் எது செய்தாலும் பிடிக்காது என்றும், நம்மை பிடித்தவர்களுக்கு நாம் செய்யும் அனைத்தும் பிடிக்கும் என நினைப்பது முட்டாள்தனம் எனவும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் நடிக்கும் 173வது படத்தின் தலைப்பு வெளியிட்டு விழா சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல்ஹாசன் அலுவலகத்தில் நடைபெற்றது. அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 173வது படத்திற்கு தர்மன் என பெயர் சூட்டப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், தாம் பேசினாலே பிரச்னை வருகிறது என கூறினார். பேசாமல் இருந்தால் வாயில் கொழுக்கட்டை இருக்கிறதா என சிலர் கேட்பதாகவும், பேசிவிட்டால் அதற்கும் பிரச்னை செய்வதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து, கமல் உடனான நட்பு குறித்தும் நடிகர் ரஜினிகாந்த் எடுத்துரைத்தார்.
முன்னதாக பேசிய நடிகர் கமல்ஹாசன், 40 ஆண்டுகளுக்கு முன்பு ராஜ்கமல் அலுவலக தொடக்க விழாவில் ரஜினிகாந்த் குறித்து பேசியதாக தெரிவித்தார்.
ஏவிஎம் வேப்ப மரத்தடியில் பேசிய இளைஞர்கள் தற்போது இந்தளவுக்கு வளர்ந்து உள்ளனர் எனக்கூறிய கமல், இந்த படத்தில் ரஜினி நடிப்பதை தயாரிப்பாளராக வேடிக்கை பார்ப்பேன் என தெரிவித்தார். மேலும், படத்தின் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்துக்கு அதிக பொறுப்பு உள்ளது எனவும் குறிப்பிட்டார்.
















