சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அமர்வதற்கு இடமளிக்க கூடாது எனக்கூறி திமுக கவுன்சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது.
சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள கூட்டரங்களில் மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் நடைபெற்றது.
நேரம் இல்லா நேரத்தில் பேசிய 12வது வார்டு உறுப்பினர் கவி கணேசன், மாமன்ற கூட்டத்தில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மண்டல உறுப்பினர்களுக்கு தான் செல்வாக்கு அதிகம் என கூறினார்.
மாமன்ற கூட்டத்தில் உறுப்பினருக்கு இணையாக அமர சட்டமன்ற உறுப்பினருக்கு என்ன செல்வாக்கு உள்ளது என்று கேள்வி எழுப்பினார். மேலும், மாமன்ற கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்க கூடாது என்றும், அவர்களுக்கு இருக்கை வழங்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்டு பேசிய மேயர் பிரியா, மாமன்ற கூட்டத்தில் பங்கேற்க சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உரிமை உள்ளது என்றும், அவர்களும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தான் என்று கூறினார்.
இதனை தொடர்ந்து பேசிய 182வது அதிமுக கவுன்சிலர் கே.பி.கே.சதீஷ், வார்டுக்கு உட்பட்ட பகுதிகளின் பிரச்னைகளை மட்டுமே பேசுவேன் என்றும், மற்ற கவுன்சிலர்களை போன்று தலைவர்களை புகழ்ந்து பேச வரவில்லை எனவும் தெரிவித்தார். உடனடியாக, திமுக கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், அதிமுக கவுன்சிலர் மீது திமுக கவுன்சிலர்கள் பேப்பரை எடுத்து வீசியதால் பதற்றம் ஏற்பட்டது.
















