முதலமைச்சர் பிறந்தநாளன்று 300 அரசுப் பேருந்துகளை அறிமுகம் செய்யத் திட்டமிட்டிருந்த அரசு, அப்பிறந்தநாள் முடிந்து இரண்டு நாட்கள் ஆகியும் அந்த நிகழ்வை நடத்தாமல், புதிய பேருந்துகளைச் சென்னையிலேயே முடக்கி வைத்திருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளர்.
அவர் விடுத்துள்ள பதிவில், ‘ரீல்ஸ்’ (Reels) பாணியிலான ஒரு காட்சிப் படப்பிடிப்புக்காக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பேருந்துகளைத் தலைநகருக்குக் கொண்டு வர ஒரு பேருந்துக்கு ₹40,000 வீதம் மொத்தம் ₹1 கோடி பொதுப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ட்ரோன் (drone) கேமரா மூலம் அனைத்துப் பேருந்துகளையும் ஒரே காட்சியில் படம்பிடிக்க வேண்டும் என்ற அரசின் பேராசையே இதற்குக் காரணமாகும். உலகம் முழுவதும் எரிபொருள் தட்டுப்பாட்டால் நாடுகள் திண்டாடி வரும் நிலையில், இத்தகைய விளம்பரப் படப்பிடிப்பு அவசியமா? அதிலும் குறிப்பாக, தமிழகம் கடும் கடன் சுமையில் மூழ்கியிருக்கும் சூழலில், வரிப்பணத்தை இப்படி வீணடிக்கலாமா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
“மக்களின் பணத்தைத் தொடமாட்டோம்! யாரையும் தொடவும் விடமாட்டோம்!” என்று முழங்கிய முதலமைச்சர். ஜோசப் விஜய், வெறும் அதிரடி வசனங்களைப் பேசுவதை நிறுத்திவிட்டு, அதைச் செயலில் நிரூபிக்க வேண்டும் என்றும், புதிய பேருந்துகளை உடனடியாக அந்தந்த பணிமனைகளுக்கு அனுப்பி இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
















