பாமக நிறுவனர் ராமதாஸுக்கும், கட்சித் தலைவர் அன்புமணிக்கும் இடையே கடந்த ஓராண்டாக கருத்து வேறுபாடு நிலவி வந்த நிலையில், தைலாபுரம் இல்லத்தில் இருவரும் சந்தித்துக் கொண்டது அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.
பாமக கூட்டணி நிலைப்பாடு மற்றும் நிர்வாகிகள் நியமனம் உள்ளிட்ட விவகாரங்களில் இருவரும் மாறுபட்ட கருத்துக்களை வெளிப்படுத்தி வந்தனர். இந்த நிலையில், தனது தந்தை ராமதாஸின் 61-வது திருமண நாளையொட்டி, அன்புமணி ராமதாஸ் குடும்பத்தினருடன் தைலாபுரம் இல்லத்துக்கு சென்றார். அவர்களுக்கு வீட்டு வாசலில் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர், அன்புமணியை அவரது தந்தை ராமதாஸ் ஆரத்தழுவி கண்ணீர் விட்ட புகைப்படம் வெளியானது. அன்புமணியின் மகள்வழி பேத்தியையும் ராமதாஸ் பிறந்ததில் இருந்து பார்க்கவில்லை என கூறப்பட்ட நிலையில், அவர்களிடமும் பாமக நிறுவனர் ராமதாஸ் உணர்ச்சிப் பெருக்கில் நலம் விசாரித்தார்.
இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த பாமக தலைவர் அன்புமணி, இனி எல்லாம் நன்றாகவே நடக்கும் என கூறியதன் மூலம், தந்தை, மகனுக்கு இடையே ஓராண்டு காலமாக நீடித்த பனிப்போர் முடிவுக்கு வந்ததாக கருதப்படுகிறது.
















