பெங்களூரு மெட்ரோவின் பர்ப்பிள் லைன் வழித்தடத்தில் ஏற்பட்ட பாதிப்பை சுட்டிக்காட்டி காங்கிரஸ் அரசை பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா கடுமையாக விமர்சித்துள்ளார்.
கர்நாடக மாநிலம், பெங்களூரு கப்பன் பார்க் மெட்ரோ நிலையத்தில் பர்ப்பிள் லைன் வழித்தடத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சேவைகள் பாதிக்கப்பட்டன. மாலை நேரத்தில் ஏற்பட்ட கோளாறால் பணி முடிந்து வீட்டிற்கு செல்ல முடியாமல் ஆயிரக்கணக்கான பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.
மெட்ரோ ரயில் நிலையத்தில் நிலவிய கடும் கூட்ட நெரிசலால், நகரம் முழுவதும் கடுமையான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில், மெட்ரோ ரயில் சேவையால் பாதிக்கப்பட்ட ஐடி ஊழியர்கள் சரக்கு லாரிகளில் ஏறி பயணம் செய்த வீடியோவை பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா இணையத்தில் வெளியிட்டு காங்கிரஸ் அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், உலக நாடுகளுக்கு இணையான தொழில்நுட்பத் திறமை கொண்ட பெங்களூருவின் நிலை இதுவென குறிப்பிட்டுள்ளார். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள நேரத்தில் ஆயிரக்கணக்கான பயணிகள் சிரமத்திற்கு ஆளானதாகவும், கர்நாடகாவில் உள்ள சீர்கெட்ட அமைப்பை மக்கள் எதிர்கொண்டு வருவதாகவும் விமர்சித்துள்ளார்.
















