சென்னையில் திமுகவின் தொழிலாளர் அமைப்பான தொமுச அலுவலகத்தில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதால் பதற்றம் நிலவியது.
திமுகவின் தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவையின் கீழ் மாநகர போக்குவரத்து கழக ஊழியர் சங்கம் செயல்பட்டு வருகிறது.
இச்சங்கத்தின் நிர்வாகிகளுக்கான பதவிக்காலம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே முடிவடைந்த நிலையில், புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலை நடத்துவதில் தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து, கொளத்தூர் மற்றும் பெரம்பூர் பகுதிகளை சேர்ந்தவர்கள் தற்காலிக புதிய நிர்வாகிகளாக அண்மையில் நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில், சங்கத்தில் 2022 ஆம் ஆண்டு வரை செயல்பட்டு வந்த பழைய நிர்வாகிகளே அடுத்த தேர்தல் நடைபெறும் வரை செயல்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, தொமுச அலுவலகத்திற்கு சென்ற பழைய நிர்வாகிகளுக்கும், அங்கு ஏற்கனவே பணியாற்றி வந்த புதிய நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், இருதரப்பினரும் மோதிக்கொண்டதால் பரபரப்பு நிலவியது.
















