மேற்குவங்க மாநிலத்தில் முதற்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவுக்கு மத்தியில் பல இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்தன.
முர்ஷிதாபாத் மாவட்டத்திற்கு உட்பட்ட டொம்கல் மற்றும் நவுடா பகுதிகளில் ஆளும் திரிணமுல் காங்கிரஸ் மற்றும் ஆம் ஜனதா உன்னயன் கட்சியினர் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் 4 பேர் காயமடைந்தனர். நவுடா பகுதியில் மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டு வீசியதால் பதற்றம் நிலவியது.
குமார்கஞ்ச் தொகுதி பாஜக வேட்பாளர் சுவேந்து சர்க்கார் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களால் தாக்கப்பட்டதை தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
தெற்கு தினாஜ்பூர் தொகுதி பாஜக வேட்பாளரை, பாதுகாப்பு அதிகாரி ஒருவர் பாதுகாக்க முயன்றபோதும், திரிணமுல் காங்கிரஸ் தொண்டர்கள் தாக்கிய சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.
சிலிகுரி பகுதியில் ஒரு வாக்குச்சாவடி அருகே கூடியிருந்த கூட்டத்தை சி.ஆர்.பி.எஃப் படையினர் தடியடி நடத்தி கலைத்தனர்.
பர்ன்பூரின் ரஹ்மத்நகர் பகுதியில், அசன்சோல் தெற்கு சட்டமன்றத் தொகுதி பாஜக பெண் வேட்பாளர் அக்னிமித்ராவை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் கார் கண்ணாடி சேதமடைந்தது.
















