ஏஐ தொழில்நுட்பம் தெரியாமல் இருப்பது கற்காலத்தில் வாழ்வதற்கு இணையானது என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தென்னிந்திய அறிவுசார் சொத்துரிமை சங்கத்தின் சார்பில், உலக அறிவுசார் சொத்துரிமை தின விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் விளையாட்டு துறையில் உள்ள அறிவு சார் சொத்துரிமைகள், ஒப்பந்தங்கள் தொடர்பாக கருத்தரங்கம் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், ஆனந்த் வெங்கடேஷ், அனிதா சுமந்த், ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ஏஐ தொழில் நுட்பம் என்பது கத்தி போன்ற ஒரு கருவி மட்டுமே என தெரிவித்தார். ஏஐ தொழில்நுட்பம் தெரியாமல் இருப்பது கற்காலத்தில் வாழ்வதற்கு இணையானது என்றும், கற்றல் அனுபவம், ஆழ்ந்த அறிவு ஆகியவை கிடைக்காமல் போவதற்கான ஆபத்துகளும் ஏஐ தொழில் நுட்பத்தை பயன்படுத்துவதால் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
















