தமிழக சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய் தலைமையிலான தவெக அரசு 144 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது.
சட்டப்பேரவையில் தவெக அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்டிருந்த நிலையில், சட்டப்பேரவை காலை கூடியதும் நம்பிக்கை வாக்கு கோரும் தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் முன்மொழிந்தார்.
இதையடுத்து, தவெக அரசு பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பு, எண்ணிக் கணிக்கும் முறைப்படி நடைபெற்றது. இதையொட்டி உறுப்பினர்கள் அனைவரும் அவரவர் இருக்கையில் அமர உத்தரவிடப்பட்டு, பேரவையின் நுழைவு வாயில்கள் அனைத்தையும் மூட அவைக்காவலர்களுக்கு சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் உத்தரவிட்டார்.
இதையடுத்து பகுதி வாரியாக உறுப்பினர்களின் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. வாக்கெடுப்பில் பங்கேற்காமல் சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு செய்தது. அதிமுகவில் இபிஎஸ் தரப்பினர் தவெக அரசை எதிர்த்தும், எஸ்.பி.வேலுமணி தரப்பினர் ஆதரித்தும் வாக்களித்தனர்.
அதிமுகவில் 22 எம்.எல்.ஏ.க்கள் எதிர்த்தும், 25 எம்.எல்.ஏ.க்கள் ஆதரித்தும் வாக்களித்தனர். வாக்கெடுப்பில் மொத்தம் 171 உறுப்பினர்கள் பங்கேற்ற நிலையில், 144 எம்.எல்.ஏக்கள் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். தீர்மானத்தை எதிர்த்து 22 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்த நிலையில், 5 பேர் நடுநிலை வகித்தனர்.
பா.ம.க, பாஜ.க நடுநிலை வகித்தது. இதைத்தொடர்ந்து, தீர்மானத்தை ஆதரித்தோர் அதிகமாக இருப்பதால், தவெக அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதாக சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவித்தார்.
















