கடலூர் மாவட்டம் வடலூரில் தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான 103 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வடலூர் நடேசன் நகர் பகுதியில் வேலாயுதம் என்பவர் வசித்து வருகிறார். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற வேலாயுதம் தனது மனைவியுடன் புளோரிடாவில் வசிக்கும் மகனை பார்ப்பதற்காக அமெரிக்கா சென்றுள்ளார்.
வேலாயுதத்தின் வீட்டை அவரது உறவினர் பராமரித்து வந்த நிலையில், இரவு வீட்டில் எரிந்து கொண்டிருந்த விளக்குகள் அணைக்கப்பட்டு, சத்தம் கேட்டதால் பயந்துபோன உறவினர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வீட்டிற்குள் சென்றுள்ளார்.
அப்போது, வீட்டில் இருந்த 2 பீரோக்களை உடைத்து 103 சவரன் நகை மற்றும் 6 லட்சம் ரூபாய் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக உறவினர் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், சம்பவ இடத்தை ஆய்வு செய்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.
















