எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தி, நாட்டுமக்களுக்கு முன்மாதிரியாகச் செயல்படும் நோக்கத்தில், தனது பாதுகாப்பு வாகன அணிவகுப்பின் எண்ணிக்கையை பிரதமர் மோடி 50 சதவீதம் குறைத்துள்ளார். அவரை தொடர்ந்து, பாஜக ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்களும் அதனை பின்பற்றி வருகின்றனர். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
கடந்த வாரம் தெலுங்கானாவில் அரசு நலத் திட்டங்களைத் தொடங்கி வைத்து உரையாற்றிய பிரதமர் மோடி, ஈரான் போர் காரணமான கச்சா எண்ணெய் விலையேற்றமும் எரிசக்தி பற்றாக்குறையும் அதிகரித்துவரும் நிலையில் எரிபொருளைச் சிக்கனமாக பயன்படுத்தவேண்டும் என்றும் நாட்டு மக்களுக்கு வலியுறுத்தியிருந்தார்.
அந்நியச் செலாவணிக் கையிருப்பைச் சேமிக்கும் நோக்கில், அடுத்த ஓராண்டுக்குத் தங்கம் வாங்குவதைத் தவிர்க்கவும், தேவையற்ற வெளிநாட்டுப் பயணங்களை ஒத்திவைக்கவும், இரசாயன உரங்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும், இயற்கை விவசாயம் மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை பயன்படுத்தவும் அவர் கேட்டுக்கொண்டார்.
பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாட்டைக் குறைக்கவும், மெட்ரோ சேவைகளை அதிகளவில் பயன்படுத்தவும், முடிந்தவரை CAR POOLING செய்யவும், மின்சார வாகனங்களைப் பயன்படுத்தவும் பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார்.
இதற்கு முன்மாதிரியாக,தனது பாதுகாப்பு வாகனங்களின் அணிவகுப்பின் எண்ணிக்கையைப் பாதியாக குறைக்க SPG என்ற சிறப்பு பாதுகாப்பு படைக்கு உத்தரவிட்டிருந்தார். பிரதமரின் குஜராத் மற்றும் அசாம் மாநிலப் பயணங்களின்போது இந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டாலும், SPG வழிகாட்டுதல்களின்படி தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் உறுதி செய்யப்பட்டுள்ளன. பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் பாஜகவின் மூத்தத் தலைவர்கள் அதனை பின்பற்றி வருகின்றனர்.
குறிப்பாக, முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் பயன்படுத்தும் அதிகாரப்பூர்வ வாகனங்களின் எண்ணிக்கையை 50 சதவீதம் குறைக்குமாறு உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். மேலும், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் வாரத்துக்கு ஒரு நாளாவது பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
தனது பாதுகாப்பு வாகன அணிவகுப்புக்கு இனி தேவையான குறைந்தபட்ச வாகனங்களையே பயன்படுத்துமாறு உத்தரவிட்டுள்ள மத்தியப் பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், மற்ற அமைச்சர்களும் இதைப் பின்பற்ற வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் பொதுப் போக்குவரத்தை அதிகம் பயன்படுத்த வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நிர்வாகம் முழுவதும் அரசு வாகனப் பயன்பாடு பெருமளவில் குறைக்கப்படும் என்றும், அமைச்சர்கள், பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு அதிகாரிகள் முடிந்தவரை CAR POOLNG மற்றும் பொதுப் போக்குவரதுக்கு முன்னுரிமை அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்றும் டெல்லி மாநில முதலமைச்சர் ரேகா குப்தா தெரிவித்துள்ளார்.
இதேபோல், ராஜஸ்தான் முதல்வர் பஜன் லால் சர்மாவும் தனது பாதுகாப்பு வாகன அணிவகுப்புகளின் அளவைக் குறைக்கவும், தேவையற்ற வாகனப் பயன்பாட்டைத் தவிர்க்கவும் அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மகாராஷ்டிராவைப் பொறுத்தவரை இந்த சிக்கன நடவடிக்கை விமானப் பயணத்துக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. மாநில அமைச்சர்கள் இனி அரசு விமானங்களைப் பயன்படுத்துவதற்கு முன்பு முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸின் அலுவலகத்திடம் முன் அனுமதி பெற வேண்டும் என்ற நடைமுறை கொண்டுவரப் பட்டுள்ளது.
மேலும் வாகன அணிவகுப்பின் அளவைக் குறைக்கப் போவதாகவும் அறிவித்துள்ள குஜராத் ஆளுநர் ஆச்சார்ய தேவ்விரத்,ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்களுக்குப் பதிலாக ரயில்கள், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தி மாநிலம் முழுவதும் பயணம் செய்யப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்தியாவசியமற்ற வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்க்குமாறு பிரதமர் மோடி விடுத்த அழைப்பைத் தொடர்ந்து, குஜராத் துணை முதலமைச்சர் ஹர்ஷ் சங்வி, ஏற்கெனவே அமெரிக்காவுக்குச் செல்ல திட்டமிட்டிருந்த தனது பயணத்தை ரத்து செய்துள்ளார்.
ஈரான் போரால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளிலிருந்து நாட்டைப் பாதுகாக்க பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ள நடவடிக்கைகளுக்கு நாடு முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
















