தெலங்கானாவில் காதலிக்க மறுத்த இளம்பெண்ணை கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்த இளைஞரை பொதுமக்கள் தாக்கிய நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தெலங்கானா மாநிலம் மஹபூப்நகர் மாவட்டம் ஜட்சர்லா நகரை சேர்ந்த வைஷ்ணவி, தனியார் பள்ளியில் வரவேற்பாளராக பணியாற்றி வந்தார். இவரை, ஹைதராபாத்தை சேர்ந்த தேஜா என்பவர் காதலிப்பதாகக்கூறி வற்புறுத்தி வந்துள்ளார். இதனை வைஷ்ணவி பலமுறை நிராகரித்துள்ளார்.
இதனிடையே, வைஷ்ணவிக்கு வேறொரு இளைஞருடன் திருமணம் நிச்சயம் ஆனது. இதனால் ஆத்திரமடைந்த தேஜா, வீட்டிற்கு நடந்து சென்ற வைஷ்ணவியை வழிமறித்து, பொதுமக்கள் முன்னிலையில் கத்தியால் கழுத்தை அறுத்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து தப்பியோட முயன்ற தேஜாவை பொதுமக்கள் விரட்டிப்பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தேஜா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
















