பாதுகாப்பு மற்றும் வர்த்தகத்துக்கு மிகவும் முக்கியமான கோழியின் கழுத்து எனப்படும் ஏழு மாநிலங்களை இணைக்கும் சாலையை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்திடம் (NHIDCL)ஒப்படைக்க மேற்கு வங்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம், அம்மாநிலத்தில் நீண்ட காலமாக தாமதமாகி வந்த உள்கட்டமைப்புப் பணிகள் விரைவில் தொடங்கபடுகின்றன. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
மேற்குவங்கத்தில் ஏழு நெடுஞ்சாலைப் பகுதிகளில் ஐந்து, அம்மாநிலத்தின் வடக்கில் உள்ள ஒரு குறுகிய நிலப்பரப்பான சிலிகுரி வழித்தடம் வழியாகச் செல்கின்றன.
நாட்டின் வடகிழக்கு மாநிலங்களையும் இணைக்கும் ஒரே தரைவழி இணைப்பாக இந்த சாலை விளங்குகிறது. 22 கிலோமீட்டர் அகலம் மட்டுமே கொண்ட இந்தக் குறுகிய சாலை நேபாளம், பூட்டான் மற்றும் வங்கதேசத்தால் சூழப்பட்டுள்ளது. மேலும் சிக்கிம் மாநிலத்துக்கு அப்பால் இந்தப் பாதைக்கு வடக்கே சீனா அமைந்துள்ளது.
தேசப் பாதுகாப்பில் ஒரு முக்கிய ‘நெருக்கடிப் புள்ளி’யாக செயல்படும் இதன் மேற்குப் பகுதியில் நேபாளம், வடக்கே பூடான் மற்றும் தெற்கே வங்கதேசம் என மூன்று சர்வதேச எல்லைகள் அமைந்துள்ளன. இந்த பாதை மட்டும் இல்லாவிட்டால், வடகிழக்குப் பகுதியில் வசிக்கும் சுமார் 5 கோடி மக்களும், அப்பகுதிக்குத் தேவையான மிக முக்கியமான இராணுவத் தளவாடங்களும் இந்தியாவின் பிரதான நிலப்பரப்பிலிருந்து செல்ல முடியாமல் போகும்.
உதாரணமாக சிக்கிம் மலைப்பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் நிலச்சரிவுகள் மற்றும் பருவமழை காரணமான இப்பகுதியில் சிவில் மற்றும் இராணுவ போக்குவரத்தையும் வெகுவாக பாதித்துள்ளன.
எனவே தேசப் பாதுகாப்புக் காரணமாக மாநில பொதுப்பணித் துறையின் (PWD) தேசிய நெடுஞ்சாலைப் பிரிவின் கீழ் இருந்த எல்லை நெடுஞ்சாலைகளை ஒப்படைக்கும் படி மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் பலமுறை கோரிக்கை விடுத்தது. மத்திய அரசின் வேண்டுகோளுக்கு மேற்குவங்கத்தின் முன்னாள் முதலமைச்சர் மம்தா தலைமையிலான அரசு ஒத்துழைப்புக் கொடுக்கவில்லை.
கொள்கை ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட பின்னும், மத்திய அரசு நிறுவனங்களுக்கு ஒப்படைக்காத நிலையில் கிட்டத்தட்ட 12 மாதங்களாக பல நெடுஞ்சாலைத் திட்டங்கள் முடங்கிக் கிடந்தன.
ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு பொறுப்பேற்றுள்ள பாஜக அரசு உடனடியாக இந்த 7 எல்லை நெடுஞ் சாலைகளை மத்திய அரசிடம் ஒப்படைத்துள்ளது.
இந்தியா-வங்கதேச எல்லையுடன் இணைக்கும் ஜாகிங்க்பூர் மற்றும் பசிர்ஹாட் போன்ற எல்லை பகுதிகளான NH-31, NH-33 மற்றும் NH-312 போன்ற முக்கிய நெடுஞ்சாலைகளை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பராமரிக்கும்.
இது போல் சிக்கிம் செல்லும் வழியான செவோக்-கலிம்போங் பகுதி, பூடான் எல்லையை ஒட்டிச் செல்லும் ஹசிமாரா-ஜைகான் சாலை, சாங்ராபண்டா வழியாக வங்கதேசத்துடன் இணையும் சாலைகள், மற்றும் சிலிகுரி-டார்ஜிலிங் மலைப்பாதை போன்ற முக்கிய நெடுஞ்சாலைகளைத் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் பராமரிக்கும். இதன் மூலம் சிக்கிம், பூடான், வங்காளதேசம் மற்றும் வடக்கு வங்காளம்-டூவார்ஸ் பகுதிக்கு இடையேயான போக்குவரத்து மிகவும் எளிதாகும்.
இந்த ஏழு நெடுஞ்சாலைகளும் தேசிய நெடுஞ்சாலைகள் நெட்வொர்க்கில் வெறும் 2 சதவீதம் மட்டுமே இருந்தாலும், சாலைப் போக்குவரத்தில் சுமார் 40 சதவீதத்தைக் கையாள்கின்றன.
இந்த சாலைகளில் தாமதமான உள்கட்டமைப்பு பணிகளைத் தொடங்குவதால் சிறந்த லாஜிஸ்டிக்ஸ், குறைந்த போக்குவரத்து செலவுகள் மற்றும் எல்லைப் பகுதி வர்த்தகம் மூலம் பீகார், மால்டா, முர்ஷிதாபாத், நாடியா மற்றும் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டங்களுடனான இணைப்பை மேம்படுத்தி, பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த ஒப்படைப்பின் மூலம் தற்போதுள்ள இரட்டைப் பாதை ரயில் பாதையை ஆறு பாதை அமைப்பாகத் தரம் உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தப் புதிய தண்டவாளங்களில் இரண்டு, தீன் மைல் ஹாட் மற்றும் ரங்கபானி நிலையங்களுக்கு இடையே, தரைக்குக் கீழே 24 மீட்டர் ஆழத்தில் 40 கிலோமீட்டர் நீளத்துக்குச் செல்லும் நிலத்தடி இரயில் பாதையாக அமைக்கப்படும்.
இது வான்வழித் தாக்குதல்கள், கனரக பீரங்கித் தாக்குதல்கள் ட்ரோன் போர் போன்ற வெளிப்புற அச்சுறுத்தல்களிலிருந்து இந்தியாவின் முக்கிய ராணுவ மற்றும் விநியோகப் போக்குவரத்துகளைப் பாதுகாக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக மாநிலம் முழுவதும் ரயில் இணைப்பை வலுப்படுத்தும் நோக்கில் மூன்று பெரிய ரயில் திட்டங்களுக்கு மத்திய அரசு ஏற்கெனவே ஒப்புதல் அளித்துள்ளது.
முன்னதாக மேற்கு வங்கத்தில் முதல்முறையாக ஆட்சிக்கு வந்த உடனேயே, முதல்வர் சுவேந்து அதிகாரி தலைமையிலான பாஜக அரசு, எல்லைப் பாதுகாப்புப் படைக்கு 120 ஏக்கர் நிலத்தை வழங்கியுள்ளது.
இந்த நடவடிக்கை, மாநில அரசின் முட்டுக்கட்டைகள் இல்லாமல் எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) மற்றும் ரயில்வே அமைச்சகம் ஆகியவை மேம்பட்ட ஏவுகணை தளங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு அரண்களை அமைக்க முடியும் என்று கூறப்படுகிறது.
நிலம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நெடுஞ்சாலைகளின் கட்டுப்பாட்டை மத்திய அரசிடம் ஒப்படைப்பத்திருப்பது இந்தியாவின் தேசப் பாதுகாப்புக்கு மிக முக்கியானதாகும்.
















