நிலவில் மனிதர்களை குடியேற்றுவதற்கான ஆய்வுக்கு நிரந்தர தளம் அமைக்கும் மூன்று கட்ட திட்டத்தை நாசா அறிவித்துள்ளது.
அமெரிக்க விண்வெளி மையமான நாசா தலைமையில் சமீபத்தில் நான்கு விண்வெளி வீரர்கள் நிலவை சுற்றி வந்தனர். ஆர்ட்டெமிஸ்-2 திட்டம் மூலம் 54 ஆண்டுகளுக்குப் பின், முதல் முறையாக நிலவை நெருங்கிச் சென்றனர்.
அந்த திட்டத்தை தொடர்ந்து, தற்போது நிலவில் நிரந்தர ஆய்வு தளம் அமைக்கும் மிகப்பெரிய திட்டத்தை நாசா அறிவித்துள்ளது. இதற்காக, 1.70 லட்சம் கோடி ரூபாய் செலவிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் நிலவின் மேற்பரப்பில், ‘ரோவர்கள், ட்ரோன்’கள் உள்ளிட்ட உபகரணங்களுடன் கூடிய நிரந்தர தளத்தை அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும், 2028-ல் சந்திரனில் விண்வெளி வீரர்களை இறக்கி விடுவதுதான் இலக்கு எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், நடப்பாண்டே மூன்று விண்கலன்களை அனுப்பி தொழில்நுட்பங்களை சோதித்து, எதிர்கால விண்வெளி வீரர்களின் பயணத்திற்கு அடித்தளம் அமைக்க உள்ளதாகவும் நாசா தெரிவித்துள்ளது.
















