வெயில் சுட்டெரிப்பதால் பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டுமென சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.
அதிகரித்து வரும் கோடை வெப்பத்தை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
கோடை வெயிலினால் அதிக வியர்வை வெளியேறும்போது உடலில் உப்புச்சத்து மற்றும் நீர்ச்சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது எனவும்
இதனால் அதிக தாகம், தலைவலி, உடல்சோர்வு போன்ற அறிகுறிகள் ஏற்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியில் வேலை செய்யும்போது, அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும் என அறிவுறுத்திய மாநகராட்சி நிர்வாகம், தாகம் இல்லை என்றாலும் போதிய அளவு நீர் பருக வேண்டும் என தெரிவித்துள்ளது.
வீட்டிலோ அல்லது பொது இடங்களிலோ எவரேனும் மயக்கமடைந்தால் உடனடியாக ஆம்புலன்சை அழைக்க வேண்டும் எனவும்
பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆஸ்பிரின் மற்றும் பாராசிட்டமால் மாத்திரைகளை கொடுக்கக்கூடாது எனவும் மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.
















