பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட ஆயிரத்து 700 ஏக்கரில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், பரந்துாரில் 5 ஆயிரத்து 600 ஏக்கர் பரப்பளவில் சென்னையின் இரண்டாவது விமான நிலையத்தை அமைக்க திமுக தலைமையிலான அரசு முடிவு செய்தது. இந்த திட்டத்திற்கான அனுமதி 2023ஆம் ஆண்டு வழங்கப்பட்ட நிலையில், இதுவரை ஆயிரத்து 700 ஏக்கருக்கு மேலாக நில எடுப்பு பணிகளை அதிகாரிகள் முடித்துள்ளனர்.
இதற்கிடையே, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைத்துள்ளது. விமான நிலைய திட்டத்தை எதிர்த்து கடந்தாண்டு தவெக தலைவர் விஜய் பேசியிருந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு முதலமைச்சர் விஜய் தலைமையில் பரந்தூர் விமான நிலையம் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து, நில எடுப்பு உள்ளிட்ட விமான நிலைய பணிகளை தமிழக அரசு நிறுத்தியுள்ளது. ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட ஆயிரத்து 700 ஏக்கரில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்க ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், விமான நிலைய திட்டம் செயல்பாட்டிற்கு வருமா அல்லது தொழில்பூங்கா அமையுமா என்பது இன்னும் முடிவாகவில்லை என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
















