கட்டுமான நிறுவன உரிமையாளருக்கு எதிராக முன்னாள் காவல் ஆணையர் அருண் பிறப்பித்த குண்டர் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
தேமுதிக பொருளாளர எல்.கே சுதீஷின் மனைவிக்கு சொந்தமான நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி முறைகேடு செய்ததாக கட்டுமான நிறுவன உரிமையாளர் சந்தோஷ் சர்மா மீது குற்றம்சாட்டப்பட்டது.
இதையடுத்து அவர் மீது குண்டர் சட்ட உத்தரவை பிறப்பித்து அப்போதைய சென்னை காவல் ஆணையர் அருண் ஆணையிட்டிருந்தார். இதனை எதிர்த்து சந்தோஷ் சர்மா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், சந்தோஷ் சர்மாவை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க கூறப்பட்டுள்ள காரணங்கள், சமூகத்தை பாதிக்கும் வகையில் இல்லை எனவும், ஒப்பந்தங்களை மீறியது குற்றமாக இருந்தாலும், அது நீதிமன்றங்களில் விசாரிக்கக் கூடியவை எனவும் தெரிவித்தது.
இந்த வழக்கால் பொது ஒழுங்கு பாதித்ததாகக் கூறுவது கேலிக்கூத்தானது என கூறிய நீதிபதி, இந்த வழக்கில் குண்டர் சட்டத்தை பயன்படுத்த எந்த அவசியமும் இல்லை என தெரிவித்தார்.
















