கர்நாடகா மாநில காங்கிரஸின் சட்டமன்ற குழு தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட டி.கே.சிவக்குமார், வரும் 3-ம் தேதி முதலமைச்சராக பதவியேற்கவுள்ளார்.
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தனது பதவியை கடந்த 28-ம் தேதி ராஜினாமா செய்தார். அவர் தற்காலிக முதலமைச்சராக நீடித்து வருகிறார். இதையடுத்து பெங்களூரில் உள்ள விதான் சவுதா அரங்கில் கர்நாடக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், கர்நாடகாவின் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் ரந்தீப்சிங் சுர்ஜேவாலா, சித்தராமையா, டி.கே.சிவகுமார் உள்ளிட்ட மூத்த காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் காங்கிரஸ் சட்டமன்ற தலைவராக டி.கே.சிவகுமார் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதற்கு காங்கிரஸ் மேலிடம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன்பின் சிவகுமார் ஆளுநரை நேரில் சந்தித்து புதிய அரசு அமைக்க உரிமை கோரினார். இதனை தொடர்ந்து கர்நாடகா முதலமைச்சராக வரும் 3-ம் தேதி டி.கே.சிவகுமார் பதவியேற்க அம்மாநில ஆளுநர் மாளிகை ஒப்புதல் அளித்துள்ளது.
















