பிலிப்பைன்ஸின் தெற்கு பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 7.8 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப் பட்டுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
தெற்கு பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்துள்ளதாகவும் 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மிண்டானாவ் பகுதியில் பூமிக்கு அடியில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ள ஜெர்மனியின் புவி அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் முதலில் 7.3-ல் இருந்து 8.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவித்தது. பின்னர் 7.8 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக என்பதை ஜெர்மன் ஆராய்ச்சி நிறுவனம் உறுதி செய்துள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்ட மிண்டானாவ் தீவுப் பகுதியில் வழக்கமான கடல் அலைகளின் உயரத்தை காட்டிலும் சுமார் ஒரு மீட்டர் உயரமுள்ள ராட்சத அலைகள் உருவானதாகவும் அது மூன்று முதல் நான்கு மீட்டர் உயரம் வரை நீளலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நிலநடுக்கம் வந்ததும் பாதுகாப்பான இடங்களை நோக்கி மக்கள் உயிர் பிழைக்க ஓடுவதையும் கட்டிடங்கள் இடிந்து விழுவதையும் காட்டும் வீடியோக்கள் வைரலாகி உள்ளன.
நிலநடுக்க மையத்திற்கு அருகில் அமைந்துள்ள ஜெனரல் சாண்டோஸ் நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில், மரச்சாமான்கள் கீழே விழுந்ததாகவும், தொலைக்காட்சிகள் மற்றும் பிற வீட்டு உபகரணங்கள் சேதமடைந்ததாகவும் வைரலான வீடியோ காட்சிகள் காட்டுகின்றன.
அலபெல் நகரின் காவல் தலைவர் பென்ஜி அன்செட்டா, கொடியேற்றும் விழாவின் போது நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து உள்ளூர் காவல் நிலையத்தில் விரிசல்கள் விழுந்ததாக கூறியுள்ளார்.
உடனடியாக பாதுகாப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளை வேகப்படுத்திய பிலிப்பைன்ஸ் அதிபர் ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர், மின்டானோவின் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறு அறிவிப்பு வரும் வரை அனைத்து மட்டங்களிலும் பள்ளிகளை மூடுவதற்கு உத்தரவிட்டுள்ளார்.
மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு சேவைகள் முற்றிலுமாக துண்டிக்கப் பட்டுள்ளதாகவும் சேத விவரங்களை மதிப்பிடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ள அதிகாரிகள் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஏற்படக்கூடிய அதிர்வுகள் aftershocks குறித்தும் அச்சம் தெரிவித்துள்ளனர்.
உடனடியாக சுனாமி எச்சரிக்கைகளை வெளியிட்ட பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா மற்றும் சர்வதேச கண்காணிப்பு அமைப்புகளின் அதிகாரிகள் ஆபத்தான கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் உயரமான இடங்களுக்குச் செல்லுமாறு வலியுறுத்தியுள்ளனர்.
மின்டானோவின் தெற்குக் கடற்கரையோரம் ஆறு பகுதிகளில் சுனாமி அலைகள் பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதே போல், ஆபத்தான சுனாமி அலைகள் இப்பகுதி முழுவதும் உள்ள கடற்கரைகளை பாதிக்கக்கூடும் என்று அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு சுனாமி எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. இந்தோனேசியாவின் புவி இயற்பியல் முகமையும் நாட்டின் வடகிழக்கு கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது.
சாதாரண அலை மட்டத்தை விட ஒரு மீட்டருக்கும் அதிகமான உயரமுள்ள சுனாமி அலைகள் பல மணிநேரம் தொடர்ந்து அடிக்கக் கூடும் என்று கூறப் பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸ் கடற்கரையின் சில பகுதிகளில் மூன்று மீட்டர் உயரம் வரையிலான அலைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், இந்தோனேசியா மற்றும் மலேசியாவின் சில பகுதிகளை ஒரு மீட்டர் உயரம் வரையிலான அலைகள் பாதிக்கக்கூடும் என்றும் பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது.
ஆசியாவின் பல பகுதிகளில் சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப் பட்டுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தெற்கு பிலிப்பைன்ஸ் முழுவதும் உள்ள கடலோர நகரங்களில் வசிக்கும் மக்களைக் கடற்கரைகளிலிருந்து வெளியேற்றப் பட்டுள்ளனர்.
கடலோரக் கிராமங்களில் இருந்து மக்களை வெளியேற்றும் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாக சரங்கானி மாகாணத்தில் உள்ள மாசிம் நகரின் பேரிடர் தலைவர் அர்லீன் ஹொல்லெரோ தெரிவித்துள்ளார்.
கடல் மட்டங்களைக் கண்காணித்து, நிலநடுக்கத்தின் தாக்கத்தை அவசர கால நடவடிக்கை குழுவினர் ,மதிப்பிட்டு வருகின்றனர். கடலோர மக்களை மிகந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும் வெளியேற்ற உத்தரவுகளைப் பின்பற்றுமாறும் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப் பட்டுள்ளனர்.
















