இந்தியா வேண்டுமென்றே வெள்ளத்தை ஏற்படுத்துவதாக பாகிஸ்தான் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை மற்றும் உண்மைகளுக்கு முரணானவை என்று இந்தியா மறுத்துள்ளது. தீவிர பருவமழையின் நேரடி விளைவாகவே செனாப் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதாகவும் இந்தியா விளக்கமளித்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
தங்கள் நாட்டில் எது நடந்தாலும் எதற்கெடுத்தாலும் இந்தியாவை நோக்கி கை நீட்டுவது பாகிஸ்தானின் வழக்கமாகவே உள்ளது.
தற்போது பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கிகுக்கு இந்தியா திட்டமிட்டு நீரைத் திறந்து விட்டதே காரணம் என்ற குற்றச் சாட்டை பாகிஸ்தான் வைத்துள்ளது.
வெள்ளப்பெருக்கிற்கு புது தில்லியே காரணம் என பாகிஸ்தான் ஊடகங்களில் வெளியான செய்திகளை இந்தியா மறுத்துள்ளது.
பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை மற்றும் உண்மைக்குப் புறம்பானவை என்று மறுத்துள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெயஸ்வால், செனாப் நதியின் நீர்மட்டம் அதிகரித்ததற்கு பருவமழைக் காலத்தில் பெய்த கனமழையே காரணம் என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
கடந்த ஜூலை 20ம் தேதி முதல் 23 தேதி வரை ஜம்மு மற்றும் அதை ஒட்டிய நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த தீவிர பருவமழையின் நேரடி விளைவாகவே செனாப் நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
கடந்த ஜூலை 22 ம் தேதி பாகிஸ்தானின் வானிலை ஆய்வு மையம் கனமழை மற்றும் வெள்ள அபாயம் குறித்தும் முனனெச்சரிக்கை விடுத்திருந்தது.
ஆதாரத்துடன் பாகிஸ்தானின் குற்றசாட்டுகளை மறுத்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெயஸ்வால் வெள்ளம் குறித்த முன் எச்சரிக்கைகளைப் பாகிஸ்தானுக்கு அனுப்பத் தவறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளையும் நிராகரித்துள்ளார்.
அதே நேரம் மனிதாபிமான அடிப்படையில் முக்கியத் தரவுகளைப் பாகிஸ்தானுடன் பகிர்வதில் இந்தியா உறுதியாக உள்ளதாக கூறியுள்ள ஜெயஸ்வால், சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பாக ஆசியான் மன்றத்தில் பாகிஸ்தான் தெரிவித்த கருத்துக்களுக்கும் மறுப்புத் தெரிவித்துள்ளார்.
எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கான ஆதரவை பாகிஸ்தான் நம்பகத்தன்மையுடன் நிரந்தரமாக நிறுத்தாத வரை, சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்திவைக்கப்படும் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
எந்த வகையிலும் சீனாவின் இறையாண்மையை இந்தியா மீறாத நிலையில் 1963ஆம் ஆண்டு முதல் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கில் உள்ள இந்திய பகுதிகளைச் சட்டவிரோதமாக சீனா ஆக்கிரமித்துள்ளது என்று குறிப்பிட்ட ஜெயஸ்வால் அப்பகுதிகளில் சீனாவின் உள்கட்டமைப்புத் திட்டங்ககளை இந்தியா தொடர்ந்து எதிர்க்கும் என்றும் கூறியுள்ளார்,
















